
இன்றைய இறைமொழி
ஞாயிறு, 1 பிப்ரவரி ’26
பொதுக்காலம் நான்காம் ஞாயிறு
செப் 2:3, 3:12-13. 1 கொரி 1:26-31. மத் 5:1-12
நாம் அனைவருமே மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார்? என்ற ஒரு பட்டியலை நாமே தயாரித்து வைத்துள்ளோம். நன்றாகப் படித்தவர்கள், நிறைய பணம் படைத்தவர்கள், பெரிய வீடு வைத்திருப்பவர்கள், பெரிய காரில் பயணம் செய்பவர்கள், நிறைய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா அல்லது சமூக வலை பிரபலங்கள் இவர்கள் யாவரும் மகிழ்ச்சியாக இருக்கிறவர்கள் அல்லது பேறுபெற்றவர்கள் என நாம் நினைக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் நினைக்கிறது. இவை யாவும் மகிழ்ச்சியும், விடுதலை உணர்வும், பெருமையும் தருகின்றன.
இருந்தாலும், இவை மூன்று வரையறைகளைக் கொண்டிருக்கின்றன: (அ) இவை யாவும் நம் செயல்களால் வருகின்றன. செயல்களைச் செய்வதற்கான ஆற்றல் இருக்கும் வரைதான் நாம் செயல்பட முடியும். (ஆ) இவை யாவும் நமக்கு வெளியே இருந்து வருகின்றன. மற்றவர்களும் அவர்களுடைய கருத்துகள் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும். (இ) குறிப்பிட்ட காலம் அல்லது இடத்திற்கு இவை உட்பட்டவை. எடுத்துக்காட்டாக, இணையதளத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிற ஒருவர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தாதவரைப் பொருத்தவரையில் அந்நியரே.
மேற்காணும் வரையறைகளைக் தாண்டி நம்மால் எப்போதும் எங்கும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
இருக்க முடியும் என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். ‘பேறு பெற்றவர்கள்’ அல்லது ‘மகிழ்ச்சிக்குரியவர்கள்’ அல்லது ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’ என்னும் எட்டு ‘பேறு பெற்ற நிலைகளுடன்’ தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்று சொற்களில் தரப்பட்டுள்ளது: (அ) இயேசு மலைமேல் ஏறுகின்றார், (ஆ) சீடர்கள் அவரிடம் வருகின்றனர், (ஆ) இயேசு அமர்ந்து கற்பிக்கின்றார்.
மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசே என அறிமுகம் செய்கின்றார். முதல் ஏற்பாட்டு மோசே மலைக்கு ஏறிச் சென்றது போல, இரண்டாம் ஏற்பாட்டு மோசே என்னும் இயேசு மலைக்கு ஏறிச் செல்கின்றார். மலைப்பொழிவு சீடர்களுக்கான போதனையாக உள்ளது. மக்கள் அனைவரும் இயேசுவைச் சுற்றி இருந்தாலும், போதனை என்னவோ இயேசுவின் சீடர்களுக்கானதாக இருக்கிறது. ஆக, மலைப்பொழிவைக் கேட்பவர்கள் சீடத்துவத்துக்கான அழைப்பைப் பெறுகின்றனர். சீடத்துவத்தை ஏற்கும் ஒருவரே மலைப்பொழிவுப் போதனையில் முழுமையாகப் பங்கேற்கவும், அப்போதனையை வாழ்ந்து காட்டவும் முடியும். மூன்றாவது, ‘அமர்தல்’ என்பது அதிகாரத்தைக் குறிக்கின்றது. தொழுகைக்கூடங்களிலும் பள்ளிகளிலும் போதிக்கின்ற ரபிக்கள், வழக்கமாக அமர்ந்துகொண்டு கற்பிப்பர். அவர்கள் தங்கள் பாடத்தின்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும், மாணவர்கள்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும் இச்செய்கை அடையாளப்படுத்துகிறது.
இங்கே மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்துக்குப் பின்னர் சீடர்களும் நம்பிக்கையாளர்களும் தங்களுக்கென ஒரு தான்மையை (அடையாளத்தை) காணவும் கட்டமைக்கவும் விரும்புகிறார்கள். தங்களுடைய சமகாலத்தவர் நடுவில் அவர்களுடைய சமூக மற்றும் சமய நிலையை வரையறுத்துக்கொள்ளவும் தேவை இருந்தது. அந்தப் பின்புலத்தில் உலகின் பார்வையில் பேறுபெற்றவர்களாக அல்ல, மாறாக, கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாகவும் இருப்பவர்களே சீடர்கள் என்ற புதிய புரிதலை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
‘பேறுபெற்ற நிலை’ என்பதை மகிழ்ச்சியான நிலை, தெரிவு செய்யப்பட்ட நிலை என்றும் புரிந்துகொள்ளலாம். இப்பகுதியில் எட்டு பேறுபெற்ற நிலைகளை இயேசு முன்மொழிகின்றார்.
லூக்கா நற்செய்தியாளர் இவ்வாக்கியத்தைச் சற்றே மாற்றி, ‘ஏழையரே நீங்கள் பேறுபெற்றோர்’ என்று இயேசு சொல்வதாக எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியில் ஏழ்மை என்பது பொருளாதார வறுமை அல்லது பின்தங்கிய நிலையை அல்ல, மாறாக, ஓர் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையைக் குறிக்கின்றது. ‘மற்றவர்களை, குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருக்கின்ற உள்ளம்’ ஏழையரின் உள்ளம் என அழைக்கப்படுகின்றது.
துயரம் என்பது நமக்கு வெளியே இருந்தும் வரலாம் – எடுத்துக்காட்டாக, இயற்கைச் சீற்றம், இழப்பு, இறப்பு. நம் தெரிவுகளாலும் வரலாம் – தவறான தெரிவுகள் துன்பம் தருகின்றன. துயரத்தில் இருப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் அல்லது கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் (காண். யோபு) என்று நினைக்கிற மக்கள் நடுவே, துயரம் அனுபவிப்பவர்கள் ஆறுதல் பெறுவார்கள் என்ற எதிர்நோக்கு இங்கே தரப்படுகிறது.
இயேசு தம்மைப் பற்றிச் சொல்லும்போது, தாம் கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர் என அறிமுகம் செய்கின்றார். என்ன நடந்தாலும் அமைதியாகவும், பொறுமையாகவும், உடைந்து போகாமலும் இருத்தலே கனிவு. கனிவு கொள்கின்ற ஒருவர் நாட்டை உரிமையாக்கிக் கொள்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் உரோமையர்கள் பாலஸ்தீனத்தை உரிமையாக்கியிருந்தார்கள். மக்கள் வன்முறை வழியாக தங்கள் நாட்டை மீட்டுக்கொள்ள விரும்பினார்கள்.
அநீதியாக நடப்பவர்கள் நடுவில் நீதியை நிலைநாட்டுதல் என்பது மிகப் பெரிய சவால். நாம் செய்கின்ற செயல்களை சரியானது, எளிதானது என இரு நிலைகளில் வகைப்படுத்தலாம். சரியானது எல்லாம் எளிமையாக இருப்பதில்லை. எளிமையானவை எல்லாம் சரியாக இருப்பதும் இல்லை. சரியானதை மட்டும் எப்போதும் விருப்பம் கொண்டிருப்பவர் நிறைவுகொள்வர்.
நம் செயல்கள் அல்ல, மாறாக, கடவுளின் இரக்கமே வழிநடத்துகிறது என்பது யூத நம்பிக்கை. ஆனால், இரக்கம் அனைவருக்கும் கிடைப்பதல்ல என்றும் அவர்கள் நினைத்தார்கள். இரக்கம் காட்டுகிற எவரும் இரக்கம் பெறுகிறார் என்பது இயேசுவின் வாக்குறுதி.
தூய்மை என்பது கடவுளோடு இணைத்துக் கொண்டாடப்படும் மதிப்பீடு. ஏனெனில், முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் தம்மைத் தூயவர் என அழைக்கின்றார். இங்கே தூய்மை என்பது வழிபாடு சார்ந்த தூய்மையைக் குறித்தாலும், தூய்மையான உள்ளம் என்பது தயார்நிலையில் இருக்கும் உள்ளம் என்றும் புரிந்துகொள்ளப்படலாம். இயேசுவின் சமகாலத்தில் தூய்மை என்பது பிறப்பு, வேலை அடிப்படையில் இருந்தது.
நம் திருஅவை இன்று அனைவரையும் கடவுளின் மக்கள் என அழைக்கிறது. ஆனால், இந்தப் புரிதல் முன்பு இல்லை. கிறிஸ்தவர்கள் அல்லது கத்தோலிக்கர்கள் மட்டுமே கடவுளின் மக்கள் என்று நாம் அழைத்தோம். யூத சமயத்திலும் ‘கடவுளின் மக்கள்’ என்பது இனம் சார்ந்த அடையாளமாக இருந்தது. ஆனால் இயேசு. அமைதி ஏற்படுத்துபவர் – சண்டை சச்சரவுகள் தவிர்ப்பவர், பிரிவு மற்றும் பிளவு மனப்பான்மையை சரி செய்பவர் அனைவரும் அமைதியை ஏற்படுத்துகிறார் என்று கூறுகிறார்.
4ஆம் பண்பில் நீதி என்பது விருப்பமாக நின்றது. இங்கே 8ஆம் பண்பில் அது செயலாகக் கனிகின்றது. விருப்பமும் செயலும் இணைந்து செல்ல வேண்டும்.
இறுதியாக, மக்களிடமிருந்து வருகிற இகழ்ச்சி, புறக்கணிப்பு நடுவில் மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் என்று சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.
மேற்காணும் பேறுபெற்ற நிலைகளுக்கும் அடிப்படையாக இருப்பது ‘தாழ்ச்சி.’ இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் முன் தங்களையே தாழ்த்தி அவரைத் தேடுகிற எளியவர்கள் அடைகிற மகிழ்ச்சியையும் பேற்றையும் நிறைவையும் பாதுகாப்பையும் எடுத்துரைக்கிறார் செப்பனியா. இரண்டாம் வாசகத்தில், தாங்கள் அழைக்கப்பட்ட நிலையை நம்பிக்கையாளர்கள் என்றும் நினைவில்கொள்ள அழைக்கிற பவுல், கடவுள் அனைத்தையும் தலைகீழாக மாற்றக் கூடியவர் என்று எச்சரிக்கிறார்.
டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். தண்ணீருக்கு வெளியே இருந்த பனிப்பாறையின் அளவை மட்டுமே பார்த்து கப்பல் முன்னேறியது. தண்ணீருக்குக் கீழே மறைந்திருந்த பாறையே கப்பல் மூழ்கக் காரணமாக இருந்தது. இதை ஓர் உருவகமாக எடுத்துக்கொள்வோம். நம் வாழ்க்கையில் நம் செயல்கள், தோற்றங்கள் அனைத்தும் தண்ணீருக்கு மேலே இருக்கிற பனிப்பாறையின் அளவைப் போன்ற சிறியவை. நம் மனப்பாங்கு தண்ணீருக்குக் கீழே மறைந்திருக்கிற பனிப்பாறை போன்றது. செயல்களில் மாற்றம் அல்ல, மனப்பாங்கு மாற்றமே நம் இருத்தலை நிர்ணயிக்கிறது.
இயேசு மொழிகிற எட்டு பண்புகளும் நம் வெளிப்புறச் செயல்களாக அல்ல, மாறாக, உள்ளார்ந்த மனப்பாங்காக மாறும்போது நம் வாழ்க்கை மாறுகிறது. மேற்காணும் பண்புகளை நாம் அணிகிற மோதிரத்தின் அல்லது அணிகலனின் எட்டு வைரக்கற்களாகப் பதிய வைத்து அவற்றை என்றும் நம் உள்ளத்தில் ஏற்று, செயல்படுத்துவோம்.
நாம் எந்நேரமும் எங்கும் பேறுபெற்றவர்களாக வாழ முடியும்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: