• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஞானமே, வாரும்! இன்றைய இறைமொழி. புதன், 17 டிசம்பர் ’25.

Wednesday, December 17, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இயேசு-தாவீதின் மகன் இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை இயேசு-கடவுளின் ஞானம் கிறிஸ்து பிறப்பு நவநாள் கடவுளின் ஞானம் கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல் யாக்கோபின் ஆசி ஆபிரகாமின் மகன் கிறிஸ்து-அருள்பொழிவு பெற்றவர்

இன்றைய இறைமொழி
புதன், 17 டிசம்பர் ’25
திருவருகைக்கால வார நாள்
கிறிஸ்து பிறப்பு நவநாள் – 1

தொடக்க நூல் 49:1-2, 8-10. மத்தேயு 1:1-17

 

ஞானமே, வாரும்!

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான நவநாளை இன்று நாம் தொடங்குகிறோம். மெசியா தலைப்புகள் ஒவ்வொன்றையும் பற்றிச் சிந்திக்க தாய்த்திருஅவை நம்மை அழைக்கிறது.

 

ஓ ஞானமே, உன்னத கடவுளின் வாயினின்று வருபவரே,

உலகின் ஒரு எல்லை தொடங்கி மறு எல்லை வரை நீள்பவரே,

அனைத்தையும் இனிமையாக நெறிப்படுத்துபவரே!

வாரும்! விவேகத்தின் வழியை எங்களுக்குக் கற்பியும்!

 

 

‘யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். நீ ஒரு சிங்கக்குட்டி. உன் தூக்கம் கலைக்கத் துணிந்தவன் எவன்? யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது!’

 

 

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு தன் புதல்வர்களுக்கு ஆசி வழங்கும் பகுதியிலிருந்து யூதாவுக்கு வழங்கப்பட்ட ஆசியை வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு யூதா குலத்தில் பிறக்கிறார். ‘யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது!’ என்னும் ஆசி இயேசுவில் நிறைவுபெறுகிறது. இயேசு கிறிஸ்து அனைத்துலகுக்கும் அரசராக என்றென்றும் ஆட்சி செய்கிறார்.

 

 

‘தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல் … யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு … ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.’

 

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கிறோம். 3, 7, 14, 42 என்று நிறைவைக் குறிக்கும் எண்களைப் பயன்படுத்தி, பெயர்களை வரிசைப்படுத்தி இயேசுவை முன்மொழிகிறார் மத்தேயு. இயேசுவின் சமகாலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் தலைமுறை அட்டவணை என்பது ஒருவருடைய வேர்களை அறிந்துகொள்வதற்கான அளவுகோல் என்று காணப்பட்டாலும், சமூகத்தில் மதிப்புக்குரியவர்களுக்கும் அரசர்களுக்குமே தலைமுறை அட்டவணைகள் எழுதப்பட்டன. மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் தலைமுறை அட்டவணையைப் பதிவு செய்கிறார்கள். இருவருடைய எழுத்துக்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆபிரகாமுடன் தலைமுறை அட்டவணையை முடித்துக்கொள்கிறார் மத்தேயு. லூக்கா அட்டவணையை ஆதாம் வரை நீட்டுகிறார்.

 

 

‘தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன், இயேசு கிறிஸ்து’ – இம்மூன்று தலைப்புகளைக் கொண்டு தலைமுறை அட்டவணையைத் தொடங்குகிறார் மத்தேயு.

 

 

‘தாவீதின் மகன்’ என்னும் தலைப்பு இயேசுவின் மெசியா நிலையைக் குறிக்கிறது. ‘ஆபிரகாமின் மகன்’ என்னும் தலைப்பு இயேசு இஸ்ரயேல் இனத்தில் தோன்றியவர் என்பதை உறுதி செய்கிறது. ‘இயேசு’ என்பது தனிப்பட்ட பெயர். ‘கிறிஸ்து’ (அருள்பொழிவு பெற்றவர்’) என்பது தலைப்பு.

 

 

தலைமுறை அட்டவணையின் காலத்தை மூன்று காலங்களாகப் பிரிக்கிறார் மத்தேயு: (அ) ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் இடையே உள்ள காலம். (ஆ) தாவீதுக்கும் பாபிலோனிய நாடுகடத்தலுக்கும் இடையே உள்ள காலம். (இ) பாபிலோனிய நாடுகடத்தலுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள காலம். ஒவ்வொரு காலத்திலும் உள்ள தலைமுறைகள் பதினான்கு – அதாவது, இரண்டு முறை ஏழு. ஏழு என்னும் நிறைவு மற்றொரு ஏழு என்னும் நிறைவால் அணிசெய்யப்படுகிறது. பதினான்கு என்பது மூன்று முறை தொடர்ந்து, நாற்பத்து இரண்டு – நிறைவுக்கெல்லாம் நிறைவு என நிறைந்து நிற்கிறது.

 

 

இயேசுவின் தலைமுறை அட்டவணை நமக்கு உணர்த்துவது என்ன? (அ) காலத்தைக் கடந்த கடவுள் காலத்துக்கு தன்னையே உட்படுத்தி காலத்தைப் புனிதப்படுத்துகிறார். (ஆ) மனித வரலாற்றில் பங்கேற்கத் திருவுளம் கொள்கிற கடவுள் வலுவற்ற மனிதர்களில் ஒருவராக தன்னையே அடையாளப்படுத்துகிறார். (இ) கடவுள் நமக்கு அந்நியமான நபர் அல்ல, மாறாக, நம்மோடு நெருக்கமான ஒரு நபர். (ஈ) தலைமுறை அட்டவணையில் பெண்கள் (தாமார், ராகாபு, ரூத்து, பத்சேபா, மரியா) அல்லது சில புறவினத்துப் பெயர்களையும் காண்கிறோம். அனைவரையும் உள்ளடக்கியதாக வரவேற்பதாக இருக்கிறது மெசியாவின் வருகை.

 

 

இன்று நாம் செபிக்கும் ‘ஓ’ – ‘ஓ ஞானமே, வாரும்!’ என்பது. ‘உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகிறவரே, எங்களுக்கு உண்மையின் வழிகாட்ட வந்தருளும்!’ என்று கொடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியின் வாழ்த்தொலி.

 

 

ஞானத்தின் மேன்மையை எடுத்துரைக்கிற நீதிமொழிகள் நூல் ஆசிரியர், ஞானம் ‘படைப்பின் தொடக்கத்திலேயே, எதுவும் படைக்கப்படும் முன்பே இருந்தது’ (நீமொ 8:22) என்கிறார். மேலும் கடவுள் பூவுலகிற்கு அடித்தளமிட்டபோது, அவருடைய சிற்பியாய் (செல்லப் பிள்ளையாய்) அவரது அருகில் இருந்தது ஞானம் (8:30).

 

 

நற்செய்தியாளர் யோவானும் இதையொட்டியே, ‘அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவராலன்றி உண்டாகவில்லை’ (யோவா 1:3) என்று எழுதுகிறார்.

 

 

இயேசுவே கடவுளின் ஞானம். இந்த ஞானம் நிறைவை நோக்கியும் உண்மை நோக்கியும் அழைத்துச் செல்வதாக! அறிவு, நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு என அறிதலை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கும் நாம், அறிவுக்குத் துணைநிற்கும் ஞானத்தைக் கடவுளிடம் கேட்போம். நம் நடுவே வருகிற கடவுள் நம் வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொள்ளும் ஞானத்தை நமக்கு அருள்வாராக! ஆமென்.

 

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: