தீபகத்திலிருந்து இறையாசீர்!
இந்த மாதம் திருஅவை மகிழ்ச்சியுடன் புனித கன்னி மரியாளின் பிறப்புத் திருநாளை கொண்டாடுகின்றது. திருஅவை சட்டம் மரியாளின் வாழ்க்கை, இறைவனின் மீட்புத் திட்டத்தோடு ஆழமாக இணைக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகிறது. அவர்களின் பிறப்பு நம்பிக்கையின் விடியலாகும். ஏனெனில் அவர்களிடம் இருந்து உலகின் ஒளியான கிறிஸ்து (யோவான் 8:12) பிறந்தார். மரியாவின் பிறப்பை நாம் போற்றும் இந்நாளில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கான மூன்று அம்சங்களை சிந்திப்போம்.
“இதோ ஆண்டவரின் அடிமை நான்” (லூக்.1:38) என்ற மரியாளின் “ஆம்” என்பது செயற்பாடான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இறைவனின் திட்டம் மறைவாக இருந்தாலும், முழுமையான நம்பிக்கையுடன் தன்னையே ஒப்படைத்தாள். நமது குடும்பங்களிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் உண்மைக்கும், நீதிக்கும், அன்பிற்கும் நாமும் அன்றாடம் “ஆம்” என்று சொல்ல அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கானாவூர் திருமணத்தில், பிறரின் தேவையை முதலில் உணர்ந்து மகனிடத்தில் எடுத்துரைத்தவர் அன்னை மரியாள் (யோவான் 2:1-11). அவளது அக்கறை நம்மைச் சுற்றியுள்ள ஏழைகள், இளைஞர்கள், தனிமையில் இருப்போர் ஆகியோரின் துயரங்களை கேட்டு, கருணையுடன் பதிலளிக்க தூண்டுகிறது. கற்றுத்தரலும் கேட்பதிலிருந்து தான் தொடங்க வேண்டும். அப்போது தான் ஆண்டவருடைய வார்த்தை மனிதர்களின் உண்மையான தேவைகளைத் நிறைவேற்றும்.
கபிரியேல் தூதர் மரியாளுக்கு பிறப்புச் செய்தியை அறிவித்தப் பின் மரியா “விரைவாக புறப்பட்டு” எலிசபெத்தைச் சந்திக்கின்றாள் (லூக். 1:39). உண்மையான சீடத்துவம் பணி மனப்பான்மையைத் தருகிறது. நம்பிக்கை உள்ளத்தில் மட்டும் அடைக்கப்பட்டிருக்காமல், பிறருக்கு சேவையாய் வெளிப்பட வேண்டும். மரியாளைப் போல நாமும் மகிழ்ச்சியோடு கிறிஸ்துவைச் சேர்த்து வார்த்தைகளாலும், செயல்களாலும், வாழ்வின் சாட்சியாலும் பிறருக்குக் கொண்டு செல்லுவோம்.
மரியாளின் பிறப்பை கொண்டாடும் இந்நாளில், அவளின் நம்பிக்கை நம்மை ஊக்குவிக்க அவளின் பரிந்துரை நம் கற்றுத்தரலை வழிநடத்த, அவளின் பணி உற்சாகம் நம் திருப்பணியைத் தீப்பற்றச் செய்யட்டும். அவளின் வழிநடத்துதலால், நம் குடும்பங்கள், பங்குகள், பள்ளிகளில் கிறிஸ்துவின் ஒளியைத் தொடர்ந்து ஒளிரச் செய்வோம்.
மரியாளின் பிறந்த நாள். நம்பிக்கையின் விடியல்.
அவளின் பரிந்துரை, நம் கற்றுத்தரலை வழிநடத்துகிறது.
அவளின் பணி உற்சாகம், நம் வாழ்வைச் சாட்சியமாக்குகிறது.
அன்னை மரியாளின் பரிந்துரை செபம் நம்மை வழிநடத்தட்டும். அவரின் தாழ்ச்சி நமக்கு வழிகாட்டட்டும்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் - தீபகம்