• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கடவுளிடமிருந்து மனிதரிடமிருந்து. இன்றைய இறைமொழி. வெள்ளி, 2 மே ’25.

Friday, May 2, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Eastertide

இன்றைய இறைமொழி
வெள்ளி, 2 மே ’25
பாஸ்கா இரண்டாம் வாரம் – வெள்ளி
திருத்தூதர் பணிகள் 5:34-42. யோவான் 6:1-15

 

கடவுளிடமிருந்து மனிதரிடமிருந்து

 

இயேசுவை இறப்புக்குத் தீர்ப்பிட்ட நாள் முதல் தலைமைச் சங்கம் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கிறது. பிலாத்துவின் முன் சண்டையிட்டு இயேசுவுக்குச் சிலுவைத் தண்டனை பெற்றுத் தந்தது, அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குக் காவல் காத்தது, படைவீரர்களுக்குப் பணம் தந்து தவறான வதந்தியைப் பரப்பச் செய்தது என எல்லாம் முடிந்தது என ஓய்ந்திருந்தவர்களுக்கு, கண்களில் விழுந்த தூசியாய், கண்களைக் கசக்கச் செய்யும் புகையாய் வந்து நிற்கிறார்கள் திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும்.

 

திருத்தூதர்கள் சாலமோன் மண்டபத்தில் இயேசுவின் பெயரால் நிகழ்த்திய அரும்செயல் மக்கள் நடுவே பரபரப்பாகப் பேசப்படுகிறது. நலம் பெற்றவரும் சங்கத்தின்முன் நிற்கின்றார். திருத்தூதர்கள் தங்கள் பேருரைகளில் தலைமைச் சங்கத்தைச் சாடுகின்றனர். எந்த அளவுக்கு அவர்கள் நிறுத்தப்பட்டார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தொடர்ந்து நடக்கின்றனர். மீண்டும் மீண்டும் எருசலேம் சங்கம் கூட்டப்படுகின்றது.

 

அப்படி ஒரு நாள் கூட்டப்பட்ட சங்கத்தில் நடந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (திப 5:34-42) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் முதன்மையான நபராக இருப்பவர் கமாலியேல். தலைமைச் சங்கத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தங்கள் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கூச்சலிட்டபோது, அறிவுப்பூர்வமாகவும், அமைதியாகவும், தன் அனுபவத்தின் பின்புலத்திலும் அறிவுரை வழங்குகின்றார் கமாலியேல்:

 

‘… இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்க ளாகவும் ஆவீர்கள்!’

 

அதாவது, காலம் தன் போக்கில் செயல்பட அனுமதியுங்கள் என்கிறார் கமாலியேல். நீடித்தவை அனைத்தும் நலம் தருபவை என்பது பண்டைக் கால நம்பிக்கை. ஏனெனில், நேரம் அல்லது காலமே பெரிய சோதனையாளர். காலத்தைக் கடந்து ஒன்று அல்லது ஒருவர் நிற்கிறார் என்றால் அவர் மேன்மையானவர். ஆகையால்தான் காலத்தால் அழியாத கட்டடங்களைக் கட்டவும், காலத்தால் அழியாத புகழைப் பெறவும் நாம் விரும்புகிறோம்.

 

ஒன்றை அதன் போக்கிலேயே அனுமதித்தால் – என்ட்ரோபி விதி போல – அது அப்படியே மறைந்துவிடும். ஒன்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் அது அப்படியே மறைந்துவிடும் என்பது நம் வாழ்வியல் அனுபவமும் கூட. நாம் அழைக்காமல் அல்லது காணாமல் விடுகின்ற நட்பு அப்படியே மறைந்து விடுகிறது. நாம் பயன்படுத்தாமல் இருக்கின்ற அறிவு மறைந்துவிடுகிறது. நாம் செயல்படுத்தாமல் இருக்கின்ற ஒரு திறன் மறைந்துவிடுகிறது. சில நேரங்களில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான நேரங்களில் காலமே வெல்கிறது.

 

கமாலியேலின் வார்த்தைகள் நம் வாழ்வுக்கும் சவால் விடுகின்றன. எப்படி?

 

நம் வாழ்வில் நாமே முன்னெடுக்கும் செயல்பாடுகள் விரைவில் மறைந்துவிடுகின்றன. ஆனால், கடவுளோடு கரம் கோர்த்து மேற்கொள்ளும் செயல்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களைப் பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு அளிக்கிறார். இந்த நிகழ்வில் இரண்டு ஊற்றுகள் உள்ளன: மனிதரிடமிருந்து வருவது, கடவுளிடமிருந்து வருவது. ஐயம், தயக்கம், கேள்வி மனிதரிடமிருந்து வருகின்றன. நம்பிக்கை, முயற்சி, விடை கடவுளிடமிருந்து – இயேசுவிடமிருந்து – வருகின்றன.

 

கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கட்டும் நம் வாழ்க்கையும் பணியும், இருத்தலும் இயக்கமும்! நம் கரங்களை நம்பி அல்ல, கடவுளின் கரங்களையும், கடவுள் கரங்கள்போல இருக்கின்ற பிறருடைய கரங்களையும பற்றிக்கொள்வோம்.

 

இறைவனின் கரம் நாம் பற்ற நமக்குத் தேவை நிறைய பொறுமை, ஆழ்ந்த அமைதி, கொஞ்சம் அறிவு.

 

கமாலியேல் கடவுளின் கரம் பற்றினார். இயேசு தந்தையின் கரம் பற்றினார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: