இன்றைய இறைமொழி
திங்கள், 2 ஜூன் ’25
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் – திங்கள்
திருத்தூதர் பணிகள் 19:1-8. யோவான் 16:29-33
துணிவுடன் இருங்கள்!
‘உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்’
இயேசுவின் பிரியாவிடைப் பேருரையின் ஒரு பகுதியாக இருக்கிறது இந்த இறைவார்த்தை. ‘உலகு’ என்பது யோவான் நற்செய்தியில் ‘கடவுளுடைய இயங்குதளத்தையும்,’ ‘கடவுளுக்கு எதிரான நிலையையும்’ குறிக்கிறது. இந்த அருள்வாக்கியத்தில் உள்ள முதல் ‘உலகு’ கடவுளின் இயங்குதளத்தையும், இரண்டாவது ‘உலகு’ கடவுளுக்கு எதிரான நிலையையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ‘துன்பம் இல்லாத உலகத்தை’ இயேசு வாக்களிக்கவில்லை. மாறாக, துன்பத்தின் நடுவில் துணிவுடன் இருக்கச் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். இயேசு உலகின்மீது கொண்ட வெற்றி தீமையின்மேல், பாவத்தின்மேல், இறப்பின்மேல் கொண்ட வெற்றியாக இருக்கிறது. நம் சகோதரராகிய இயேசு உலகின்மீது வெற்றிகொண்டார் எனில் நாமும் உலகின்மேல் வெற்றி கொள்வோம் என்பதே நாம் கொண்டிருக்கிற எதிர்நோக்கு.
‘மகிழ்ச்சியும் எதிர்நோக்கும்’ (கௌதியும் எத் ஸ்பெஸ்) என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கக் கொள்கைத் திரட்டு, ‘இறைவனின் துணை இல்லாதபோது மக்கள் துன்பத்தில் துவண்டுவிடுகிறார்கள். நிலையான வாழ்வின்மேல் உள்ள எதிர்நோக்கு இல்லாதபோது வாழ்வின் பிரச்சினைகள், இறப்பு, குற்றவுணர்வு, துன்பம் போன்றவற்றுக்கு விடை தெரியாமால் மக்கள் விரக்திக்கு ஆளாகிறார்கள்’ (காண். எண் 21) என மொழிகிறது.
தன் வாழ்வின் இறுதியில் எலும்புருக்கி நோயினால் வருந்தி கைகள் நடுக்கம் கண்ட நிலையிலும் ஓவியம் வரைந்துகொண்டிருந்தார் பிரெஞ்சு ஓவியர் ஆகஸ்ட் ரெனோவா. ‘இந்த வலியிலும் ஓவியம் வரைய வேண்டுமா?’ என்று அவரிடம் கேட்டார் நண்பர். ‘வலி மறைந்துவிடும். அழகு நிலைத்து நிற்கும்’ என்று புன்முறுவல் பூத்தவாறு ஓவியம் வரைவதைத் தொடர்ந்தார் ரெனோவா.
இன்று நம்மை விரக்திக்கும் சோர்வுக்கும் ஆளாக்குகிற துன்பம் எது? உடல் நோயா? மனக் குழப்பமா? அச்சமா? முடிவெடுக்க முடியாத நிலையா? எங்கு செல்வது என்று தெரியாத நிலையா? தேக்கநிலையா? தயக்கமா? வலித்தாலும் தொடர்ந்து வழிநடப்போம். ஏனெனில், துன்பத்தின் வழியாகவே நாம் வெற்றி அடைகிறோம். எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்! துணிந்து நடப்போம் துன்பத்தைத் தழுவியவர்களாக!
‘துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மனஉறுதியும், மனஉறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது. ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.’ (உரோ 5:3-5)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: