
இன்றைய இறைமொழி
திங்கள், 3 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 18-ஆம் வாரம்
எரே 28:1-17. மத் 14:22-36
பொய் இறைவாக்கினர்
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவுக்கும் இறைவாக்கினர் அனனியாவுக்கும் இடையே நடக்கிற மோதலை வாசிக்கிறோம்.
இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்னும் கடவுளின் செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறார் எரேமியா. இந்தச் செய்தி ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாகவும் கசப்பாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, தானே இறைவாக்கினர் என அறிவித்துக்கொள்கிற அனனியா, பாபிலோனிய நாடுகடத்தல் நடைபெறாது என்னும் பொய்யான செய்தியை மக்கள் நடுவே அறிவிக்கிறார். இந்தச் செய்தி பொய்யான செய்தியாக இருந்தாலும் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. ஏனெனில், அவர்களுடைய உணர்ச்சிப் பொங்குதலுக்கு இது உகந்ததாக இருக்கிறது. மேலும், இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இப்போது இருப்பதுபோலவே சிலைவழிபாடு செய்யலாம்.
பொய்யாக இறைவாக்குரைத்து மக்களின் மனத்தைத் திசைதிருப்பிய அனனியாவைக் கடிந்துகொள்கிறார் எரேமியா.
நாம் அனைவரும் இந்த உலகத்தில் இறைவாக்கினர்களாக இருக்கும் அழைப்பு பெற்றுள்ளோம். திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுள்ள இந்த அழைப்பு உண்மைக்குச் சான்று பகர நம்மை அழைக்கிறது. உண்மையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக பொய்யையும் எளிதானவற்றையும் பின்பற்றும்போது நாமும் பொய் இறைவாக்கினர்களாக மாறுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: