• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

காயம்பட்ட மருத்துவர். இன்றைய இறைமொழி. செவ்வாய், 5 மே 2026.

Tuesday, May 5, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 5 மே 2026
பாஸ்கா ஐந்தாம் வாரம்
திப 14:19-28. யோவா 14:27-31

 

காயம்பட்ட மருத்துவர்

 

ஆன்மிகவியலில், ‘காயம்பட்ட மருத்துவர்’ (‘wounded healer’) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இச்சொல்லாடலை அறிமுகம் செய்தவர் ஹென்றி நுவென் என்ற அருள்பணியாளர். அதாவது, ஒவ்வோர் அருள்பணியாளரும் தானே காயம்பட்ட ஒரு நிலையில் இருந்தாலும், மற்றவர்களுக்கு நலம் தர அவர் மிகவே முயற்சி செய்கின்றார். அல்லது அடுத்தவர்களுக்கு நலம் தரும் அவருடைய உள்ளத்திலும் காயங்களும் இருக்கின்றன. இதில் என்ன அழகு என்றால், அவர் தானே காயம் பட்டவராக இருப்பதால் மற்றவர்களுடைய காயங்களை அவரால் எளிதில் கண்டுகொண்டு நலமாக்க முடியும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்த பவுல்மேல் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. கல்லால் அடிபட்டு ஊருக்கு வெளியே தூக்கி வீசப்படுகின்றார் அவர். அவர் இறந்துவிட்டதாக நினைத்து மக்கள் கலைந்து செல்ல, அவரோ பர்னபாவுடன் இணைந்து தெருபைக்குச் செல்கின்றார்.

 

தெருபையில் அவர்கள் செய்யும் செயல் நமக்கு வியப்பாக இருக்கிறது: ‘நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்’ என்று கூறி அங்கிருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். இவர்களே வேதனையுடன் புறப்பட்டுச் செல்கின்றனர். ஆனால், அங்கிருந்த மக்களின் வேதனை இவர்களுடைய வேதனையை விட அதிகமாக இருந்தது. ஆகவே தங்கள் வேதனையை ஒதுக்கி வைத்துவிட்டு அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்குகின்றனர்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்’ எனத் தன் சீடர்களிடம் சொல்கிறார் இயேசு. ஆனால், வாழ்க்கை முழுவதும் இயேசு கலக்கத்தை மட்டுமே அனுபவித்துள்ளார். பிறக்கும்போதே சத்திரத்தில் இடம் இல்லை. பிறந்தபின் பெத்லகேமில் இடம் இல்லை. வளர்ந்தபின் நாசரேத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவராகவே தம்மோடு இருக்குமாறு விரும்பி அழைத்த அவருடைய திருத்தூதர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை, அல்லது தவறாகப் புரிந்துகொண்டனர், அல்லது மறுதலித்தனர், அல்லது காட்டிக் கொடுத்தனர். இப்படியாக, தன் வாழ்நாள் முழுவதும் கலக்கத்தையே அனுபவித்த ஒருவர் எப்படி அமைதியை அருள முடியும்?

 

அவர் கலக்கத்தை அனுபவித்தவர் என்பதால், அவர் அமைதியையும் அனுபவித்தவராக இருக்கிறார். ஆகையால்தான் அமைதியை அவர் வாக்களிக்கின்றார். தானே வலுவற்ற நிலையை அனுபவித்திருந்ததால் வலுவற்ற நிலையின் வலியை அறிந்தவராக இருக்கின்றார்.

 

நாம் அனைவரும் காயம்பட்ட மருத்துவர்கள்தாம். நம் காயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தவரின் காயம் இன்னும் பெரிதாக இருப்பதால் குணமாக்குவது இன்னும் அதிகக் கட்டாயமாக இருக்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: