இன்றைய இறைமொழி
வியாழன், 5 ஜூன் ’25
புனித போனிபாசு – ஆயர், மறைசாட்சி
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் – வியாழன்
திருத்தூதர் பணிகள் 22:30. 23:6-11. யோவான் 17:20-26
‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்!’
நாம் தொடர்ந்து வாசித்து வந்த இயேசுவின் பிரியாவிடைப் பேருரை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. சீடர்களும் சீடர்களுடைய அறிவிப்பின் வழியாக இயேசுவைப் பின்பற்றுகிற அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் இறைவேண்டலாகவும் அழைப்பாகவும் இருக்கிறது. ‘ஒன்றாக இருத்தல்’ என்பது ‘ஒன்றுபோல இருத்தல்’ அல்ல, மாறாக, வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுதல், இணைந்திருத்தல் என்பதாகும். இயேசுவுக்கும் தந்தைக்குமான நெருக்கமே நம் அனைவரிடமும் இருக்க வேண்டிய நெருக்கத்திற்கான உருவகமாக இருக்கிறது. சீடர்கள் நடுவே காணப்படும் ஒற்றுமையே இயேசு இந்த உலகுக்குத் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்பதன் அடையாளமாக இருக்கிறது. ‘இணைந்திருத்தல்’ அல்லது ‘நெருக்கத்தை’ இயேசு யோவான் நற்செய்தியில் திராட்சைக் கொடி உருவகம் வழியாகவும் எடுத்துரைக்கிறார். இணைந்திருத்தல் வழியாக கிளைகள் ஊட்டம் பெறுகின்றன, கனி தருகின்றன.
2021 முதல் 2024 வரை திருஅவையில் நாம் கொண்டாடிய கூட்டியக்கத்துக்கான மாமன்றம் இத்தகையே ஒருமைப்பாட்டையே நமக்கு வலியுறுத்தியது. மாமன்றத்துக்கான தயாரிப்பு ஆவணத்தில், ‘குழுமம்’ என்னும் சொல்லோவியத்தைப் பயன்படுத்துகிற திருத்தந்தை பிரான்சிஸ், ‘இயேசு, திருத்தூதர்கள், மக்கள்’ என்னும் மூவருக்குமான நெருக்கமும் ஒன்றிணைப்பும் கூட்டியக்கத் திருஅவைக்கான பாடங்கள் என எழுதுகிறார்.
‘நீ உன் சுண்டுவிரலை நகர்த்தும்போது தூரத்தில் உள்ள நட்சத்திரத்தை நகர்த்துகிறாய்’ எனக் கற்பிக்கிறது தாவோயிஸம். மானுடர்களாகிய நாம் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள். சமூகம் மற்றும் குழும வாழ்வு நம் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒருவர் மற்றவருக்கு இடையேயான நெருக்கத்தை நாம் உணர்வதே ‘ஒன்றாக இருத்தலுக்கான’ தொடக்கம்.
நாம் வாழும் இந்த உலகம் தனிமனித சுதந்திரம், தனியுரிமை ஆகியவற்றின்பேரில் நம்மை தனித்தனி தீவுகளாக மாற்றிவிடுகிறது. தனியாக இருக்கும் நாம் எளிதில் தோற்கடிக்கப்படுகிறோம். நம் குடும்பம், பணியிடம், சமூகம், பங்கு, திருஅவை ஆகியவற்றோடு இணைந்திருத்தல் அவசியம். மேலும், மனிதர்களை வேற்றுமைப்படுத்திப் பார்க்கும் போக்கும் அதிகமாக வளர்கிறது. எனக்கு அருகில் இருப்பவருக்கும் எனக்குமான ஒற்றுமையைப் பார்ப்பதை விடுத்து வேற்றுமையைப் பார்க்கத் தொடங்கினால் பிரிவு ஏற்படுகிறது.
‘முப்புரிக் கயிறு அறுவது கடினம்’ (சஉ 4:9)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: