இன்றைய இறைமொழி
புதன், 6 ஆகஸ்ட் ’25
ஆண்டவரின் தோற்றமாற்றம்
2 பேதுரு 1:16-19. லூக்கா 9:28ஆ-36
இன்று இயேசுவின் தோற்றமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். ஒத்தமைவு நற்செய்தியாளர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இந்நிகழ்வு பற்றிப் பதிவு செய்ய, இந்நிகழ்வை நேரில் கண்ட யோவான் தன் நற்செய்தியில் இதைப் பற்றி எதையும் எழுதவில்லை. இன்றைய நாளில் லூக்கா நற்செய்தியாளரின் பதிவை நாம் வாசிக்கிறோம்.
லூக்காவின் பதிவில் காணும் மூன்று சொல்லாடல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
(அ) இறைவேண்டல் அனுபவம்
மேன்மையான அல்லது முதன்மையான நிகழ்வுகள் அனைத்தும் இறைவேண்டலின் சூழலில் நடைபெறுவதாகப் பதிவு செய்கிறார் லூக்கா. இயேசுவும் அவருக்கு நெருக்கமான மூன்று திருத்தூதர்களும் மலையில் இறைவேண்டல் செய்கிறார்கள்.
(ஆ) தூக்கத்திலிருந்து விழிப்பு நிலை
இறைவேண்டல் செய்து கொண்டிருந்த திருத்தூதர்கள் தூங்கி விடுகிறார்கள். தூங்கி எழுபவர்கள் மாட்சியைக் காண்கிறார்கள். அவர்கள் தூக்கம் நம்பிக்கையின்மையின் உருவமாகவும் புரிந்துகொள்ளப்படலாம்.
(இ) இவருக்குச் செவிசாயுங்கள்!
‘இஸ்ரயேலே, செவிகொடு!’ என்னும் இணைச்சட்ட நூல் கட்டளை இங்கே சீடர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறாக, இயேசுவே ஆண்டவர் என்னும் செய்தி தரப்படுகிறது. தந்தைக்கும் மகனுக்குமான நெருக்கத்தை சீடர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வுதான் திருத்தூதர்களுக்கு எதிர்நோக்கு தருகிறது.
‘இங்கிருப்பது எத்துணை நன்று!’ என்பது நம் இறைவேண்டலாகவும் இருக்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: