• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

திருச்சபைக்கு இன்னல் நகருக்கு மகிழ்ச்சி. இன்றைய இறைமொழி. புதன், 7 மே ’25.

Wednesday, May 7, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Eastertide

இன்றைய இறைமொழி
புதன், 7 மே ’25
பாஸ்கா மூன்றாம் வாரம் – புதன்
திருத்தூதர் பணிகள்8:1ஆ-8. யோவான் 6:35-40

 

திருச்சபைக்கு இன்னல் நகருக்கு மகிழ்ச்சி

 

‘அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது’ – என்னும் சொற்களுடன் தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம். நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுதல், மண்ணைவிட்டு விரட்டப்படுதல், சிறைத்தண்டனை ஆகிய மூன்றும் திருஅவை அன்று அனுபவித்த துன்பங்களாக இருந்தன.

 

ஆனாலும், திருச்சபை அழிந்துபோகவில்லை.

 

சிதறடிக்கப்பட்டவர்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவிக்கிறார்கள். ஆக, தாங்கள் சிதறடிக்கப்பட்டதை பிரச்சனை என்று பார்க்காமல், நற்செய்தி அறிவிப்பதற்கான வாய்ப்பு எனப் பார்த்தார்கள் தொடக்கக் கிறிஸ்தவர்கள்.

 

தொடக்கக் கிறிஸ்தவர்கள் எதிர்த்தகைவை நாம் இங்கே பார்க்கிறோம். எந்தத் துன்பம் வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு அதிலிருந்து மீண்டும் எழக்ககூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

 

இவர்களுடைய எதிர்த்தகைவுக்குக் காரணம் இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைப் பார்வை. தாங்கள் இன்று அடைகிற துன்பத்தைத் தாண்டிய நாளைய மகிழ்ச்சியை அவர்கள் கண்டார்கள்.

 

இன்றும் நாம் நம் நம்முடைய நம்பிக்கை, கருத்தியல், நிலைப்பாடு ஆகியவற்றுக்காக துன்புறுகிறோம், எதிர்க்கப்படுகிறோம், நிராகரிக்கப்படுகிறோம். யாரும் பார்க்கவில்லை என்றாலும் வயலில் பார்க்கிற பூ போல நாம் நம் வாழ்வின் முழுமையை எந்தச் சூழலிலும் அடையப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

தயக்கம், பின்வாங்குதல், மற்றவர்களுக்கு எதிர்வினை ஆற்றுதல் போன்றவை நம்மை முன்நோக்கிச் செல்ல விடுவதில்லை.

 

‘இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று’ என்று முதல் வாசகம் நிறைவு பெறுகிறது. திருத்தொண்டர் பிலிப்பு ஆற்றுகிற பணி மக்களுக்கு நலத்தையும் வளத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. ஆக, நாம் இன்னலுற்றாலும் எதிர்த்தகைவு வழியாக மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்க நம்மால் இயலும்.

 

நற்செய்தி வாசகத்தில் இயேசு, ‘என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல. என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்தேன்’ என்கிறார். சொந்த விருப்பமும் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட விருப்பமும் பல நேரங்களில் எதிர்த்திசையில் செல்கின்றன. தொடக்கக் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தை அல்ல, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடவுளின் விருப்பத்தையே நிறைவேற்றினார்கள்.

 

இறைவிருப்பத்தை அறிதலும் அதைப் பற்றிக்கொள்தலும் நலம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: