• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

செல்வத்தைப் பயன்படுத்துதல். இன்றைய இறைமொழி. வெள்ளி, 7 நவம்பர் ’25.

Friday, November 7, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

ஒளியின் மக்கள் இடம்-பெலகிரினோ செல்வ பயன்பாடு உலக மக்கள் செல்வ தன்மை முன்மதி நேர்மையின்மை தன்னறிவு நல்லுள்ளம் உடனடி செயலாக்கம் எதிர்மறை நிகழ்வுகள் பவுல் பணியின் இயல்பு இலக்குத் தெளிதல்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 7 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், வெள்ளி
உரோமையர் 15:14-21. லூக்கா 16:1-8

 

செல்வத்தைப் பயன்படுத்துதல்

 

இன்றைய நற்செய்தி வாசகம் அறநெறிப் பார்வையில் ஒரு நெருடலான பகுதி. தன் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கும் வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்படுவதை இயேசு பாராட்டுகின்றார்: ‘ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.’

 

மற்றவர்களை ஏமாற்றுவதற்கும், பொறுப்பில் இருப்பவர்கள் தமக்கேற்ற வகையில் செயல்படுவதற்குமான எடுத்துக்காட்டு அல்ல இது.

 

செல்வத்தை ஒருவர் எப்படியும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று செல்வத்தின் தன்மை பற்றிப் பேசுவதற்காக இயேசு கையாள்கிற உருவகம் இது.

 

வீட்டுப் பொறுப்பாளர் இறுதிவரை தன் தலைவரின் சொத்துகளைப் பாழாக்குபவராகவே இருக்கிறார்.

 

‘நூறு குடம் எண்ணெய்’ என்னும் கடனை, ‘ஐம்பது குடம்’ என்றும், ‘நூறு மூடை கோதுமை’ என்னும் கடனை, ‘எண்பது மூடை’ என்றும் எழுதுமாறு பணிக்கிறார்.

 

தலைவர் அவரது செயலைப் பாராட்டுவதுடன், இயேசுவும், ‘ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள்’ என்று பாராட்டுகின்றார்.

 

பொறுப்பற்ற, ஆனால், முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரின் செயலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

 

தலைவரின், இயேசுவின் பாராட்டு மொழிகளை எப்படிப் புரிந்துகொள்வது?

 

பொறுப்பாளரின் செயல்கள்:

 

(அ) தன்நிலை அறிதல் அல்லது தன்னறிவு

 

தான் பொறுப்பிலிருந்து அகற்றப்படுவது உறுதி என்பதை அவர் முன்னுணர்ந்தவராக இருக்கிறார். மேலும், தலைவர் அவரை நீக்கப்போவதாகச் சொன்னவுடன், ‘மண் வெட்டவோ என்னால் இயலாது, இரந்து உண்ணவோ வெட்கமாய் இருக்கிறது’ என்று தன்நிலை அறிகிறார்.

 

(ஆ) நல்உள்ளத்தை விலை கொடுத்து வாங்குவது

 

மற்றவர்களின் நல்லுள்ளத்தை நாம் பெற கண்டிப்பாக முயற்சிகள் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார் இவர். தலைவரின் சொத்தைக் கொண்டே கடன்பட்டவர்களையும் அவர்களுடைய தயை மற்றும் நல்லுள்ளத்தையும் விலைக்கு வாங்குகின்றார்.

 

(இ) உடனடியாகச் செயலாற்றுதல்

 

தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் உடனடியாக ஈடுபடுகின்றார். தன்னைப் பற்றித் தன் தலைவரிடம் சொல்லிக் கொடுத்தவர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கவில்லை அவர்.

 

மேற்காணும் மூன்றையும், ‘முன்மதி’ என்ற வார்த்தையில் சொல்லிவிடுகிறார் இயேசு.

 

எதிர்மறையான ஒரு நிகழ்வை அந்த வீட்டுப் பொறுப்பாளர் பிரச்சனையாகப் பார்க்காமல், வாய்ப்பாகப் பார்க்கிறார். அதற்காகத்தான் தலைவரும் இயேசுவும் அவரைப் பாராட்டுகின்றனர்.

 

எதிர்மறை நிகழ்வுகள் நடந்தே தீரும். ஆனால், அவற்றை நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் தீர்வு இருக்கின்றது. அவற்றை நாம் பிரச்சனைகள் என எடுத்தால், அவற்றைக் குறித்து புலம்பிக் கொண்டிருப்போம். அவற்றை வாய்ப்பாக நாம் பயன்படுத்தினால், எதிர்மறை நிகழ்வுகளையும் நமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

 

மேலும், வீட்டுப் பொறுப்பாளர், அழிந்து போகும் செல்வத்தை வைத்து அழியாத நட்பைத் தேடிக்கொள்கின்றார். இதுதான் நாளைய நற்செய்தி வாசகம்.

 

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், தன் பணியின் இயல்பு என்ன என்பதையும், தன் பணியின் இலக்கு மக்கள் யார் என்பதையும் தெளிவாக அறிந்தவராக இருப்பதைக் காண முடிகிறது. இலக்குத் தெளிவும், அந்த இலக்கை நோக்கிய இயக்கமும் பவுல் தருகிற வாழ்க்கைப் பாடங்கள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: