இன்றைய இறைமொழி
வியாழன், 8 மே 2025
பாஸ்கா மூன்றாம் வாரம் – வியாழன்
திருத்தூதர் பணிகள் 8:26-40. யோவான் 6:44-51
ஆண்டவராகிய தூதர் பிலிப்பிடம், ‘நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ!’ எனக் கட்டளையிடுகிறார்.
‘எருசலேமிலிருந்து காசாவுக்கு’ என்னும் சொல்லாடலை இன்று நாம் வாசிக்கும்போது நமக்கு நெருடலாக இருக்கிறது. இந்தப் பாதைதான் இன்று போர்க்கான தளவாடங்களையும் வீரர்களையும் அழைத்துச் செல்லும் பாதையாக உள்ளது. வன்மம், பகைமை, வன்முறை, இரத்தம், கண்ணீர், இழப்பு ஆகியவை போருக்குக் காரணிகளாகவும் போரின் விளைவுகளாகவும் உள்ளன.
திருத்தொண்டர் பிலிப்பு ஆற்றிய நற்செய்திப் பணியை நாம் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். முதலில் நாம் இங்கே பார்க்க வேண்டியது தொடக்கக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தெரிவுகள். ‘ஆண்டவரின் தூதர்’, ‘தூய ஆவியார்’ ஆகியோர் பிலிப்புவை வழிநடத்துகிறார்கள். பிலிப்பு இவர்களின் வழிகாட்டுதல்களை எப்படிக் கண்டுணர்ந்தார்? ஆவியாரில் இணைந்த வாழ்வு வாழ்கிற ஒருவர் ஆவியாரின் வழிநடத்துதலை எளிதாகக் கண்டுகொள்ள இயலும். பிலிப்பு தன் பாதையைத் தெரிந்துகொள்வதற்குக் கடவுள்தாமே உதவி செய்கிறார்.
எத்தியோப்பிய அரசியின் நிதியமைச்சரான அண்ணகர் ஒருவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அவர் இறைவாக்குப் பகுதியை வாசிக்கிறார். ‘நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா?’ என்று தேரை ஒட்டி ஓடிக்கொண்டே கேட்கிறார் பிலிப்பு. குதிரைகளின் ஓட்டம், வண்டியின் சப்தம், மற்ற வண்டிகளின் ஓட்டம் அனைத்தின் நடுவிலும் பிலிப்பு கேட்ட கேள்வி நிதியமைச்சரின் காதுகளில் விழுகிறது. நாம் வாழ்கிற ஒவ்வொரு சூழலையும் நற்செய்தி அறிவிப்புத் தளமாக மாற்றிக்கொள்ள முடியும்.
பிலிப்பு அறிவித்த நற்செய்தியின் ஆற்றல் நமக்கு வியப்பளிக்கிறது. அவர் பேசிக்கொண்டிருக்கும் சற்று நேரத்தில் மனமாற்றம் அடைகிறார். வழியில் தண்ணீரைக் கண்டவுடன் திருமுழுக்கு பெற விரும்புகிறார். திருமுழுக்கு பெறுதல் மனமாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது.
இந்நிகழ்வு முடிந்தவுடன் தூய ஆவியார் பிலிப்புவைத் தூக்கிக்கொண்டு போகிறார். இதுவும் நமக்கு வியப்பளிக்கிறது. ஒரு பணி முடிந்தவுடன் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுகிறார் திருத்தொண்டர். நம் பணி தருகிற சொகுசு நம்மைத் தேங்க வைத்துவிடும் என்பதால் அடுத்த பணிக்கு அனுப்புகிறார் ஆவியார்.
இந்நிகழ்வில் முதல்நிலையில் செயல்படுபவர் தூய ஆவியாரே!
ஆவியாரின் தூண்டுதலை நாம் இன்று பெரும்பாலும் நினைப்பதே இல்லை. ‘உங்களோடு இருக்குமாறு நான் ஒரு துணையாளரை உங்களுக்குத் தருவேன்’ என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு மொழிந்தார். நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் இவரை எண்ணியவாறு நாம் வாழ முயற்சி செய்தால் ஊனியல்பின் ஆற்றல் நம்மேல் வெற்றிகொள்ள இயலாது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: