• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆவிக்குரிய இயல்பு. இன்றைய இறைமொழி. ஞாயிறு, 8 ஜூன் ’25.

Sunday, June 8, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Easter Season Eastertide Holy Spirit

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 8 ஜூன் ’25
தூய ஆவி ஞாயிறு – பெந்தகோஸ்தே
திருத்தூதர் பணிகள் 2:1-11. உரோமையர் 8:8-17. யோவான் 14:15-16, 23-26

 

ஆவிக்குரிய இயல்பு

 

இன்று நம் தாய்த்திருஅவை தனது பிறந்த நாளாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானுடத்தை அன்று இணைத்தன. இன்று இத்தூய ஆவியாரின் பெயரைக் கொண்டே நிறைய பிரிவுகள் திருஅவையிலும், பிரிவினை சபைகளில் தோன்றிவிட்டன என்பது வருத்தத்திற்குரியது.

 

‘தூய ஆவியானவர் திருவிழா’ நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது: (1) இவரை எப்படி அழைப்பது? ‘தூய ஆவி’ என்று அழைப்பதா? அல்லது ‘தூய ஆவியார்,’ அல்லது ‘தூய ஆவியானவர்’ என்று அழைப்பதா? (2) ‘தந்தை’ மற்றும் ‘மகன்’ என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. ‘தூய ஆவியானவர்’ உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா? (3) ‘தந்தை உலகைப் படைத்தார்,’ ‘மகன் உலகை மீட்டார்,’ ‘தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்’ என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை. (4) இன்று ‘பெந்தகோஸ்தெ’ என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், ‘நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?’ என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். மற்றும் (5) ‘அருங்கொடையாளர்கள்’ (‘கரிஸ்மேடிக்ஸ்’) என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

 

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: ‘தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!’ (காண். திப 19:1-10)

 

இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் ‘தூய ஆவி’ என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். விவிலியத்தில் ‘தூய ஆவி’ என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

 

(1) ‘ஆண்டவரின் ஆவி.’ எபிரேயத்தில் ‘ருவா’ என்ற வார்த்தையை ‘ஆவி’ என்று மொழிபெயர்க்கிறோம். இந்த ‘ஆவி’ தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உளது’ என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

 

(2) ‘இயேசுவின் ஆவி.’ தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

 

(3). ‘மூவொரு இறைவனில் ஓர் ஆள்.’ தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், ‘தூய ஆவியானவர்’ என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட ‘தூய ஆவி’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், ‘ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!’ (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

 

(4). தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். ‘ஊனியல்பு,’ ‘ஆவிக்குரிய இயல்பு’ என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் ‘ஆவிக்குரிய இயல்பு’ என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

 

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

 

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்: (அ) ‘ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.’ முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார். (ஆ) ‘நிபந்தனைக்குட்பட்டவர்.’ தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார். (இ) ‘அவர் ஒரு ஆற்றல்.’ தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

 

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன: (அ) ‘அனைவருக்கும் தூய ஆவி.’ திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார். (ஆ) ‘நிபந்தனைகள் அல்லாதவர்.’ ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார். (இ) ‘அவர் ஒரு மனிதர்.’ மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவர் வழியாகவே நாம் கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம்.

 

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

 

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

 

1. ‘பெந்தக்கோஸ்து’ என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.

 

2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.

 

3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.

 

4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.

 

5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

 

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

 

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வௌ;வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

 

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. ‘எல்லாம் முடிந்தது!’ என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

 

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘ஊனியல்பு – ஆவிக்குரிய இயல்பு’ என்று நமக்குள்ளே உள்ள இரண்டு இயல்புகளைச் சுட்டிக்காட்டுகிற பவுல், தூய ஆவியின் இயல்பைக் கொண்டு வாழ நம்மை அழைக்கிறார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறுதி இராவுணவுப் பேருரையில், தூய ஆவியாரை தம் சீடர்களுக்கு வாக்களிக்கிற இயேசு, தூய ஆவியாரை, ‘கற்றுத் தருகிறவர்,’ ‘நினைவூட்டுகிறவர்’ என முன்மொழிகிறார்.

 

இவ்வளவு பெரிய இறையியல் ஆராய்ச்சியை இன்றைய வாழ்வோடு நாம் எப்படி பொருத்திப் பார்ப்பது?

 

எளிதான உருவகத்திலிருந்து தொடங்குவோம். நாம் இருக்க, இயங்கக் காரணம் நம்மில் இருக்கும் உயிர். இந்த உயிர் உடலில் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. சுவாசத்தில் இருக்கிறது என்றால், இரத்தம் வெளியேறும்போது நாம் ஏன் இறக்கிறோம்? இரத்தத்தில் இருக்கிறது என்றால் இறந்தவர் ஏன் வாய் திறக்கிறார்? உயிர் எங்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், உயிர் இல்லை என்றால் இயக்கம், வெப்பம், இருப்பு என எல்லாம் நின்றுவிடுகிறது. தூய ஆவியாரை இந்த உயிருக்கு ஒப்பிடலாம்.

 

நம் உடலில் உயிர் குடியிருப்பதை பல நேரங்களில் மறந்துவிடுவதுபோல, தூய ஆவியாரின் இருத்தலையும் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.

 

இறுதியாக, ‘பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்’ – இவற்றோடு, பொய், சந்தேகம், வெறுப்பு, எரிச்சல், பழிவாங்குதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தை பேசுதல், திருட்டு, ஏமாற்றுதல் என கூட்டிக்கொள்ளலாம்! – போன்ற உடல் சார்ந்தவற்றை விடுத்து, இறப்பின் காரணிகளை விடுத்து, ‘அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்’ (காண். கலா 5:22-23) ஆகியவற்றை நோக்கி நம் மனத்தை எழுப்பும்போது அங்கே அவர் அசைவாடுகின்றார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: