இன்றைய இறைமொழி
திங்கள், 9 ஜூன் ’25
மரியா திருஅவையின் தாய் – நினைவு
திருத்தூதர் பணிகள் 1:12-14. யோவான் 19:25-27
இணைந்திருத்தலும் இறைவேண்டலும்
‘அவருடைய தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்’
பெந்தகோஸ்தே ஞாயிறுக்குப் பின்வரும் திங்கள் கிழமையை ‘தூய கன்னி மரியா திருஅவையின் தாய்’ என்று கொண்டாடப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் (2018) அழைப்பு விடுத்தார். ‘திருஅவையின் தாய்’ என்னும் தலைப்பை தூய மரியாவுக்கு வழங்கியவர் திருத்தந்தை புனித 6-ஆம் பவுல் (1964). இத்தலைப்பு மரியாவுக்கு மூன்று நிலைகளில் பொருந்துகிறது: (அ) திருஅவையின் தலையாகிய கிறிஸ்துவைப் பெற்றெடுத்த தாய் மரியா. (ஆ) நீரினாலும் ஆவியாலும் புதுப்பிறப்படைந்த நம்பிக்கையாளர்களின் தாய் மரியா, ஏனெனில், சிலுவையின் அடியில் தம் தாயை அன்புச் சீடரின் தாயாக விட்டுச் செல்கிறார் இயேசு. (இ) நம்பிக்கையின் முன்மாதிரி என்னும் அடிப்படையில் திருஅவையின் தொடக்கநாளில் திருத்தூதர்கள் அனைவரோடும் இணைந்து இறைவேண்டல் செய்கிறார் மரியா.
இயேசுவுக்கும் திருத்தூதர்களுக்கும் இடையே இணைப்புக் கோடாக நிற்கிற மரியா, இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் திருத்தூதர்களோடு இணைந்திருக்கிறார். இறைவேண்டலின் முன்மாதிரியாக இருக்கிறார் அவர். ‘எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரால் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்’ (மத் 18:20) என்னும் இயேசுவின் சொற்களை முழுமையாக நம்பிய மரியா, இறைவேண்டல் வழியாக இயேசுவின் உடனிருப்பை மீண்டும் சீடர்களுக்கு வழங்குகிறார். திருத்தூதர்கள் கூடியிருந்த மேலறையில்தான் கிறிஸ்தவ மறைத்தூதுப் பணி தொடங்குகிறது. இப்பணியின் முன்னோடியாகத் திகழ்கிறார் மரியா.
ஆக, ‘இணைந்திருத்தல்,’ ‘இறைவேண்டல்,’ ‘மறைத்தூதுப் பணி’ ஆகிய மூன்றும் திருஅவையின் அடிப்படையான கூறுகள் என்பதை மரியாவின் செயல் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘கிறிஸ்தவ வாழ்வு என்பது சிலுவையின் மறைபொருளிலும், நற்கருணையில் நாம் காணும் இயேசுவின் தற்கையளிப்பிலும் வேரூன்ற வேண்டும் … மரியா மீட்பரின் தாயாகவும் மீட்கப்பட்ட நம் அனைவரின் தாயாகவும் திகழ்கிறார்’ என்று மொழிகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிலுவையின் அடியில் இயேசு தம் தாயை அன்புச் சீடருக்கு வழங்கும் நிகழ்வில் அன்னை கன்னி மரியாவின் கையறுநிலையைக் காண்கிறோம். கையறுநிலைக்கு ஆளான மரியா திருத்தூதர்களுக்கு நம்பிக்கை ஒளி காட்டுகிறார். நம் வாழ்வில் நாம் பல்வேறு நிலைகளில் கையறுநிலையை உணர்கிறோம் – தனித்துவிடப்படுதல், பகைமை, கண்டுகொள்ளாத்தன்மை, வறுமை, நோய், இழப்பு. கையறுநிலையிலிருந்து எதிர்நோக்குக்கு நாம் கடந்துசெல்ல நமக்குத் துணையாக நிற்பது இறைவேண்டல்.
‘இதோ, ஆண்டவரின் அடிமை! உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ அடிமை எனத் தன்னையே கையளித்த மரியாவை தாய் என்னும் நிலைக்கு உயர்த்துகிறார் கடவுள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: