• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கூட்டாற்றல். இன்றைய இறைமொழி. புதன், 9 ஜூலை ’25.

Wednesday, July 9, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time கூட்டாற்றல் யோசேப்பும் சகோதரர்களும் எகிப்தின் பஞ்சம் பன்னிருவர் திருத்தூதர்கள் திருத்தூதுப் பணி

இன்றைய இறைமொழி
புதன், 9 ஜூலை ’25
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – புதன்
தொடக்கநூல் 41:55-57. 42:5-7,17-24. மத்தேயு 10:1-7

 

கூட்டாற்றல்

 

தன் சகோதரர்களில் விற்கப்பட்டு, வணிகர்களால் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட யோசேப்பு எகிப்தின் ஆளுநராக மாறுகிறார். கடவுளின் கரமே அவரை வழிநடத்திச் செல்கிறது. ஆண்டவருடைய பார்வையில் நேர்மையானதை மட்டுமே செய்கிறார் யோசேப்பு. வாழ்வின் எந்தச் சூழலிலும் அவர் தன்னைப் பலிகடா என்று எண்ணவே இல்லை. மாறாக, ஒரு தலைவராக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எதிர்கொள்கிறார். சிறையில் கைதியாகக் கிடந்த எபிரேய அடிமையில் தன் நாட்டின் ஆளுநரைக் கண்டுகொள்கிறார் பாரவோன். பஞ்சத்தின்போதும் எகிப்தில் உணவு கிடைப்பதை யாக்கோபும் அவருடைய மகன்களும் கண்டுகொள்கிறார்கள். உணவு வாங்க வந்த இடத்தில், வந்தவர்கள் தன் சகோதரர்கள் என்பதை யோசேப்பு கண்டுகொள்கிறார். ஆனால், சகோதரர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

 

இயேசு தம் சீடர்கள் பன்னிருவரைக் கண்டுகொள்கிறார். தீய ஆவிகளை ஓட்டவும் பேய்களை விரட்டவும் அவர்களுக்கு அதிகாரம் தருகிறார். அதிகாரம் கொடுத்து பணிக்கும் அனுப்பி வைக்கிறார். தங்கள் பணியின் இலக்கு மக்களாக சிதறுண்டு போன இஸ்ரயேல் மக்களைக் கண்டுகொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

 

இயேசு தம் பணியை மேம்படுத்துகின்றார்.

 

தன்னுடன் இருந்த சீடர்களிடமிருந்து 12 பேரைத் தேர்ந்தெடுத்து திருத்தூதர்கள் என்று பெயரிட்டு, நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஓட்டவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கின்றார். ஆக, மக்களை மேம்படுத்துகின்றார்.

 

இரண்டாவதாக, இலக்கைக் கூர்மைப்படுத்துகின்றார். யாரிடம் செல்ல வேண்டும்? அல்லது அவர்களுடைய பணி யாரை நோக்கியதாக இருக்க வேண்டும்? என வரையறை செய்கின்றார். இவ்வாறாக, செய்முறையை மேம்படுத்துகின்றார்.

 

மக்களை மேம்படுத்த வேண்டுமெனில் மக்களை நாம் நம்மவர் எனப் பார்க்க வேண்டும். அவர்கள் நம் ஆற்றலைக் கூட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

 

ஒரு கை இன்னொருவரின் கையோடு சேரும்போது இரு கைகளின் ஆற்றலைவிட கூடுதலான ஆற்றலைப் பெறுகின்றது. இதுவே கூட்டாற்றல்.

 

மனிதர்கள் நம்மைக் கண்டுகொள்வதை விடக் கடவுளின் பார்வை நம்மேல் பட்டு, அவர் நம்மைக் கண்டுகொள்தல் நம் வாழ்வில் மேன்மையைக் கொண்டுவருகிறது. அவருடைய கரம் நம்மோடு இருக்கிறது என்று கண்டுகொண்டு, அவர்மேல் கொண்ட அச்சத்துடன் வாழும்போது அவர் நம்மைக் கண்டுகொள்கிறார். அவர் நம்மைக் கண்டுகொள்கிறார் எனில், தேவையில் இருப்பவர்களைக் கண்டுகொள்தலும் அவர்களுடைய தேவை நிறைவேற்றுவதும் நாம் செய்ய வேண்டிய திருத்தூதுப் பணியாகும். இயேசு தம் திருத்தூதர்களைக் கண்டுகொள்கிறார். அவர்களுக்குத் தம் அதிகாரத்தில் பங்குதருகிறார். அவர்கள் தங்கள் பணியின் இலக்கைக் கண்டுகொண்டவுடன் அவர்களுடைய பயணம் தொடங்குகிறது. நம் வாழ்வின் இலக்கு என்ன என்பதைக் கண்டுகொள்தலும் அதை முதன்மையாகக் கொள்தலும் நலம்.

 

நம்மைச் சார்ந்தவர்கள் அல்லது நமக்கு அருகில் இருப்பவர்களின் ஆற்றலைக் கண்டுகொண்டு அதை மேம்படுத்தினால் நம் ஆற்றலும் மேம்படுகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: