• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஒளிரட்டும் நம் ஒளி! இன்றைய இறைமொழி. செவ்வாய், 10 ஜூன் ’25.

Tuesday, June 10, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Light of Faith

இன்றைய இறைமொழி
செவ்வாய், 10 ஜூன் ’25
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – செவ்வாய்
2 கொரிந்தியர் 1:18-22. மத்தேயு 5:13-16

 

ஒளிரட்டும் நம் ஒளி!

 

‘இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!’

 

மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில், பேறுபெற்றோர் யார் என அறிவிக்கிற இயேசு தொடர்ந்து தம் சீடர்களிடம், ‘நீங்கள் உலகுக்கு உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்’ என அறிவிக்கிறார். ‘இருக்க வேண்டும்’ என்று கட்டளையாக அல்ல, ‘நீங்கள் ஏற்கெனவே இருக்கிறீர்கள்!’ என்று சீடர்கள் அடைந்துள்ள பேறுபெற்ற நிலையை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். தொடர்ந்து வருகிற பகுதியில், ‘உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!’ என்று கட்டளையிடுகிறார் இயேசு. மலைமேல் உள்ள ஊர் போலவும் – வெளிப்படையாக, மரக்காலில் வைக்கப்பட்ட விளக்கு போல – பயன்தரக்கூடிய வகையிலும் சீடர்கள் ஒளிர வேண்டும். கிறிஸ்தவச் செயல்பாடு பற்றி பிலிப்பி நகர இறைமக்களுக்கு எழுதுகிற பவுல், ‘உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்’ (பிலிப்பியர் 2:15) என்று அவர்கள் உள்ளத்தில் உள்ள ஒளியைத் தூண்டி எழுப்புகிறார்.

 

‘லூமன் ஜென்ஷியும்’ (‘மக்களினத்தாரின் ஒளி’) என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கக் கொள்கைத் திரட்டு, ‘திருஅவையே மக்களித்தாரின் ஒளி’ என முன்மொழிகிறது (எண் 1). மேலும், பொதுநிலையினர் இந்த உலகில் உப்பாகவும் ஒளியாகவும் திகழ்கிறார்கள் எனவும் கூறுகிறது. (எண் 33).

 

முதல் ஏற்பாட்டில், ‘தோரா’ அல்லது ‘சட்ட நூல்’ ‘ஒளி’ என்று கருதப்பட்டது – ‘உம் வார்த்தை என் காலுக்கு விளக்கு. என் பாதைக்கு ஒளியும் அதுவே’ (திபா 119:105). இறைவாக்கினர் எசாயா இஸ்ரயேல் மக்களை உலகின் ஒளி என அழைக்கிறார்: ‘என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ (எசா 49:6). எருசலேம் ஆலயமும் ‘ஒளியின் அடையாளமாக’ கருதப்பட்டது. இவற்றோடு இணைந்து இப்போது இயேசுவின் சீடர்கள் உலகின் ஒளியாக மாறுகிறார்கள்.

 

உப்பின் இயல்பு தன்னையே மறைத்து தான் கலந்திருக்கும் பொருளுக்குச் சுவை தருவது. ஒளியின் இயல்பு வெளிச்சம் தந்து பொருள்களை ஒளிர்விப்பது, வழிகாட்டுவது, அறிவு புகட்டுவது. ஒரே நேரத்தில் மறைந்தும் வெளிப்படையாகவும், ஒன்றாகக் கலந்தும் தனித்து நின்றியும் வாழ்வதற்கு இயேசு அழைக்கிறார். நம் இல்லத்தில், சமூகத்தில், பங்குத்தளத்தில், பணியிடத்தில் நம் இருத்தல் மற்றவர்களுக்கு வாழ்வு தந்து வழிகாட்டுகிறது என்றால் நாமும் ஒளியாக இருக்கிறோம்.

 

‘உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்’ (யோவா 8:12). கதிரவனிடமிருந்து ஒளியைப் பெறுகிற சந்திரன் அதைப் பிரதிபலிப்பது போல, இயேசுவிடமிருந்து ஒளியைப் பெறுகிற சீடர் அதைப் பிரதிபலிக்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: