இன்றைய இறைமொழி
புதன், 11 ஜூன் ’25
புனித பர்னபா – நினைவு
திருத்தூதர் பணிகள் 11:21-26. 13:1-3. மத்தேயு 5:17-19
‘பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்கான அவர்களை ஒதுக்கி வையுங்கள்’
இன்று திருத்தூதரும் பவுலின் உடனுழைப்பாளருமான புனித பர்னபாவை நினைவுகூர்கிறோம். ‘ஆறுதலின், ஊக்கப்படுத்துதலின் புதல்வர்’ என்று மற்ற திருத்தூதர்களால் அழைக்கப்பட்ட (காண். திப 4:36) இவர், தமக்குள்ள நிலத்தை விற்று அந்தப் பணத்தை திருத்தூதர்களிடம் கொண்டுவருகிறார் (காண். திப 4:37). பவுலை மற்ற சீடர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவரே. துன்புறும் திருஅவைக் குழுமங்களுக்க ஆறுதல்மொழி கூறி ஊக்கப்படுத்தியவரும் இவரே. ‘இவர் தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவர்’ என்று தூய ஆவியார் அறிவிக்கிறார். ‘ஒதுக்கி வைக்கப்படுதல்’ என்பது இங்கே ‘தனித்து வைக்கப்படுதல்,’ ‘சிறப்பாகக் கருதப்படுதல்,’ ‘அர்ப்பணம் செய்யப்படுதல்’ என்னும் பொருளில் உள்ளது. இவருடைய (மற்றும் பவுலுடைய) வாழ்வின் நோக்கத்தை ஆண்டவர் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். மேலானவற்றுக்காக ஒதுக்கி வைக்கப்படுகிறவர்கள் கீழானவற்றைத் தழுவக் கூடாது.
‘கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் திருமுழுக்கின் வழியாக தனிப்பட்ட மாண்பைப் பெறுகிறார்கள்’ (லூமன் ஜென்ஷியும், 40). பொதுநிலையினர் தனிப்பட்ட பணிக்காக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் (கிறிஸ்திஃபிதெலஸ் லய்ச்சி, 15). அருள்பணியாளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலை பற்றி எடுத்துரைக்கிறது ப்ரெஸ்பித்தெரோரும் ஓர்தினிஸ் (எண் 2). ஒதுக்கி வைக்கப்படுதல் என்பது பணிக்காக அன்றி, அதிகாரம் செலுத்துவதற்காக அல்ல. நம்மையே தனிமைப்படுத்திக்கொள்வதில் அல்ல, மாறாக, நம்மையே கடவுளுக்கு அர்ப்பணிப்பதில்தான் இது உள்ளது. ஒதுக்கி வைக்கப்படுபவர் தன்னையே மறைத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, மற்றவர்கள்முன் சான்று பகர வேண்டும்.
நாம் அனைவருமே நம் வாழ்வின் நோக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம். பவுலுக்கும் பர்னபாவுக்கும் தூய ஆவியார் வெளிப்படையாக அறிவித்ததுபோல, நமக்கு அறிவிப்பதில்லை. இருளில், குழப்பத்தில், பயத்தில் சிக்கித் தவிக்கும் நாம் இதுவா, அதுவா என்று தத்தளிக்கிறோம். நம் வாழ்வின் நோக்கம் நமக்கு வெளிப்படுத்தப்படும் வரை ஒருவர் மற்றவருக்கு ஊக்கமும் ஆறுதலும் தருதல் நலம்.
இன்றைய நம் உலகம் நமக்கு பயத்தையும் விரக்தியையும் தருகிறது. ‘பர்னபா’ போல ஆறுதலின் புதல்வர்கள் இன்று நமக்குத் தேவைப்படுகிறார்கள். ஆறுதலின் புதல்வர்களை நாம் அரசியல் தளங்களிலும் சினிமாவிலும் விளையாட்டிலும் தேடுகிறோம். போலியான ஆறுதல்களைத் தழுவி ஏமாந்து போகிறோம். நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் திருஅவையிலும் ஒருவர் மற்றவருக்கு ஊக்கமும் ஆறுதலும் தருவது நம் கடமை.
‘நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று … நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது’ (2 கொரி 1:3-4).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: