• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சினம் தவிர்த்தல். இன்றைய இறைமொழி. வியாழன், 12 ஜூன் ’25.

Thursday, June 12, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Vice-Anger

இன்றைய இறைமொழி
வியாழன், 12 ஜூன் ’25
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – வியாழன்
2 கொரிந்தியர் 3:15-4:1, 3-6. மத்தேயு 5:20-26

 

சினம் தவிர்த்தல்

 

‘தம் சகோதரர் சகோதரிகளிடம் சினம்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்!’

 

தம் சீடர்களின் நெறி அவர்களுடைய சமகாலத்து மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்களின் நெறியைவிடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என மலைப்பொழிவில் அறிவுறுத்துகிறார் இயேசு. பழைய ஏற்பாட்டில் மோசே வழங்கிய கட்டளைகளை மேற்கோள் காட்டி, கட்டளைகள் காட்டுகிற செயல்களைத் தாண்டி கட்டளைகள் அறிவுறுத்துகிற அடிப்படையான பண்புகளைத் தம் சீடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். ‘கொலை செய்யாதே!’ என்னும் கட்டளையின் பின்புலத்தில் உள்ள எதிர்மறையான உணர்வு ‘கோபம் கொள்தல்.’ கோபம் கொள்தல் என்னும் உணர்வை ஒருவர் கையாளாமல்போகும்போது கொலை என்னும் செயலுக்கு அது அவரை இட்டுச் செல்கிறது. கோபம் மற்றவர்கள்மேல் மனத்தாங்கலை ஏற்படுத்துகிறது. சமரசம் செய்துகொள்ளாத அளவுக்கு நம் உள்ளத்தைக் கடினப்படுத்துகிறது. சினங்கொள்தல் என்னும் உணர்வு, மற்றவர்களை ‘முட்டாள், அறிவிலி’ எனக் கடிந்துரைக்கும் கடுஞ்சொற்களாக மாறி, பின்னர் கொலை என்னும் செயலில் முடிகிறது. உணர்வு, சொல், செயல் ஆகியவற்றுக்கான தொடர்பை நாம் அறுக்க வேண்டுமெனில், கோபம் என்னும் உணர்வு நம்மில் எழும்போதே நாம் விழிப்பாக இருந்து அதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

 

‘பழிவாங்குதலுக்கான விருப்பமே கோபம். கொலை இதயத்தில் உருவாகிறது’ என உரைக்கிறது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (எண். 2302). ஏழு தலையாய பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது கோபம் (எண். 1866). ‘கோபம் நம்மைப் பிரிக்கிறது. இரக்கமே நம்மை இணைக்கிறது’ என்கிறார் திருத்தந்தை புனித 2-ஆம் யோவான் பவுல் (‘திவெஸ் இன் மிஸெரிகோர்தியா’, எண் 14).

 

வல்ல செயல்களின் இறைவாக்கினர் என்று பழைய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிற எலிசா சிறு குழந்தைகள்மேல் கோபம் கொள்கிறார். எலியாவிடமிருந்து இறைவாக்கினர் பணியைப் பெற்று இல்லம் திரும்புகிற எலியாவைப் பார்க்கிற சிறுவர்கள், ‘வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ!’ என்று கேலி செய்கிறார்கள். அவர்கள் மேல் கோபம் கொள்கிற எலிசா அவர்களைச் சபிக்கிறார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்து இரண்டு பேரைக் குதறிப்போடுகின்றன. அவருடைய கோபம்நிறைந்த உள்ளத்தைக் கடவுள் கனிவுநிறை பெண் ஒருவர் வழியாக – சூனேம் நகரப் பெண் – மாற்றுகிறார். கோபம் அல்ல, கனிவே வாழ்வுக்கு அடிப்படை என்பதைக் கற்றுக்கொள்கிறார் எலிசா.

 

கோபம் என்னும் உணர்வு நம் உறவுநிலைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோபம், பொறாமை, ஒப்பீடு, மனத்தாங்கல், பகைமை, வெறுப்பு என குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் கசக்கின்றன. இன்று நாம் காணும் இனவெறுப்பு, சமய வெறுப்பு, வகுப்பு வெறுப்பு ஆகியவற்றின்பின் மறைந்திருக்கிற உணர்வு கோபம்.

 

‘சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்’ (எபேசியர் 4:24).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: