• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சீடத்துவத்தின் மாதிரி. இன்றைய இறைமொழி. வெள்ளி, 13 ஜூன் ’25.

Friday, June 13, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Discipleship Saint Antony of Padua

இன்றைய இறைமொழி
வெள்ளி, 13 ஜூன் ’25
பதுவை நகர் புனித அந்தோனி – நினைவு
எசாயா 61:1-3. லூக்கா 10:1-9

 

சீடத்துவத்தின் மாதிரி

 

‘ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது’

 

அன்பின் கோடி அற்புதர், ஏழைகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிற பதுவை நகர் புனித அந்தோனியாரை இன்று நாம் நினைவுகூர்கிறோம். 1195-ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்து, அகுஸ்தினார் சபையில் அருள்பணியாளராக மாறுகிற அந்தோனியார் பிரான்சிஸ்கு சபையாரின் மறைபரப்பு ஆர்வத்தால் கவரப்பட்டு பிரான்சிஸ்குவின் சபையில் நுழைகிறார். மறைத்தூது பணி ஆர்வம் அவரை மொராக்கோவுக்கு இட்டுச் சென்றது. எனினும், உடல் நலக் குறைவால் போர்ச்சுகல் அனுப்பப்பட்டார். ஆனால், அவரும் அவருடைய தோழர்களும் வந்த கப்பல் இத்தாலியில் கரை ஒதுங்கியதால் அங்கேயே தங்கி பணி செய்கிறார். 36 ஆண்டுகள் (இறப்பு 1231) மட்டுமே வாழ்ந்த இப்புனிதர் சீடத்துவத்தின் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இறந்த அடுத்த ஆண்டிலேயே திருத்தந்தை 9-ஆம் கிரகொரி அவர்களால் புனிதராக அறிவிக்கப்படுகிறார்.

 

(அ) இறைத்திருவுளத்துக்கு அர்ப்பணம்

 

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ தன் பணியின் இலக்கு என்று கருதி அங்கு செல்கிறார். ஆனால், உடல்நலக்குறைவால் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டபோது இத்தாலியில் தரை இறங்குகிறார். தன் விருப்பம் அல்ல, மாறாhக, இறைவிருப்பமே செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை உணர்ந்தவராக இருந்தார் நம் புனிதர்.

 

(ஆ) கடவுள்மேல் பற்றுறுதி

 

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார் அந்தோனியார். இறையியல் படிப்பு, தொடர் அறிவுத்தேடல், வறியவர்கள்மேல் பரிவு என அவர் மேற்கொண்ட அனைத்துப் பயணங்களிலும் கடவுளை உறுதியாகப் பற்றிக்கொண்டார். குழந்தை இயேசுவை கைகளில் ஏந்தும் பேறு பெறுகிறார். தான் பெற்றுள்ள அறிவு மற்றும் மறையுரை வைக்கும் ஆற்றல் ஆகியவற்றை அவருடைய குழும உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் பொறுமை காத்தார்.

 

(இ) இன்றே மீட்பு!

 

‘வாழ்வின் இன்றைய பொழுதே மீட்பின் பொழுதாக இருக்கிறது.’ இயேசுவின் பிறப்பை இடையர்களுக்கு அறிவிக்கிற வானதூதர்கள், ‘இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்’ என்கிறார்கள். சக்கேயுவின் வீட்டுக்குள் நுழைகிற இயேசு, ‘இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று!’ என்கிறார். தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் இறைவனின் இயங்குதளமாகக் கண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தித் தன் மக்களை மேம்படுத்தினார் அந்தோனியார். தொடர் பயணம், எழுத்து, இறைவேண்டல் என தன் வாழ்வின் குறுகிற நாள்களை நிறைவுள்ளவை ஆக்கினார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து அவர்களை இருவர் இருவராகத் தமக்கு முன் அனுப்புகிறார். அழைக்கப்பட்ட அனைவருமே அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படுகிற அனைவருமே ஆண்டவருடைய ஆவியால் நிறைந்திருக்க வேண்டும்.

 

ஆண்டவராகிய கடவுள் நம் ஒவ்வொருவரையும் வாழ்வு என்னும் கொடையால் அணி செய்து இந்த உலகத்துக்குள் அனுப்பியுள்ளார். நாம் அனைவரும் கடவுளின் சீடர்கள் என்னும் எண்ணம் நம் வாழ்வையும் பணியையும் உறவுகளையும் மேம்படுத்துகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: