இன்றைய இறைமொழி
சனி, 14 ஜூன் ’25
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – சனி
2 கொரிந்தியர் 5:14-21. மத்தேயு 5:33-37
சொல் அறம்
‘நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகிறது.’
தம் சீடர்களின் நெறி பரிசேயர்களின் நெறியைவிட சிறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய இயேசு, தொடர்ந்து வழங்கும் எடுத்துக்காட்டுகளில், ‘சொல் அறம்’ இன்றைய பாடமாக இருக்கிறது. ‘பொய்யாணை இடாதீர்!’ என்னும் கட்டளையைப் பற்றிப் பேசுகிறார் இயேசு. ‘ஆணை இடுதல்’ என்னும் நிகழ்வில் ஒருவர் தன் சொல் உண்மையானது என்பதை வலியுறுத்த இன்னொருவரின் – கடவுளின், கடவுளுடைய ஆலயத்தின், ஆலயத்தின் பொன்னின், பீடத்தின், குருவின், அரசரின் – துணையை நாடுகிறார். தன்னால் இயலாத அல்லது தனக்கு மிகுந்த அல்லது தன்னைவிடக் கடந்த ஒன்றைப் பற்றி ஒருவர் முன்மொழிவது ஏற்புடையது அல்ல எனக் கற்றுத் தருகிறார் இயேசு. பொய்யாணை இடுகிற நபர் மற்றவரைத் திருப்திப்படுத்த நினைக்கிறார். அவர் தன்னிலேயே வேரற்றவராக, நம்பத்தகாதவராக இருக்கிறார். உண்மை பேசுதலும், குறைத்துப் பேசுதலும் ஆணையிடுதலிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பது இயேசு தருகிற பாடம்.
‘ஆணையிடுதல்’ பற்றி அறிவுறுத்துகிற கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, ‘ஆணை இடுகிற நபர் இரண்டாவது கட்டளைக்கு எதிராக – ஆண்டவருடைய பெயரை வீணாகப் பயன்படுத்துதல் – பாவம் செய்கிறார் (எண். 2142). நாம் ஆணையிடுகிற ஒன்றை நிறைவேற்றாமல்போகும்போது யார் பெயரால் நாம் ஆணையிட்டோமோ அவரைப் பழிக்கிறோம். கடவுள் பெயரால் நான் ஆணையிடும்போது அதை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கு எதிராக நான் தெய்வ நிந்தனை செய்கிறேன் (எண். 2148).
நீதித்தலைவர் இப்தா அவசரப்பட்டு ஆண்டவரின் திருமுன் ஆணையிடுகிறார். விளைவு, அவர் அன்பு செய்த ஒரே மகளை பலியாக்குகிறார் (நீத 11:29-40). விருந்தினர்கள்முன் ஏரோது இட்ட ஆணை திருமுழுக்கு யோவானின் இறப்புக்குக் காரணமாக அமைகிறது (மாற் 6:17-29).
மிகுதியான சொற்களைத் தவிர்ப்பது நம் உரையாடல்களில் அவசியம். இன்று வாழும் நம் சமூகம் நாம் அனைத்தையும் பேச வேண்டும், எழுத வேண்டும் எனக் கற்பிக்கிறது. ஆனால், அதிகமாக நாம் பேசும்போது நம் சொற்கள் அவற்றின் பொருளை இழந்துவிடுகின்றன. ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் என்பதுபோல சொற்கள் எளிமையாகவும், நேரிடையாகவும், உண்மையாகவும் அமைதல் வேண்டும். எபிரேயத்தில் ‘தவார்’ என்னும் சொல் ஒரே நேரத்தில் வார்த்தையையும் செயலையும் குறிக்கிறது. விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் அனைத்தும் வெற்று வார்த்தைகளே!
‘கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பம்கொள்வதில்லை … கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போவதைவிட வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்’ (சஉ 5:4-5).
Share: