• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அடையாளம் கேட்பதேன்? இன்றைய இறைமொழி. திங்கள், 16 பிப்ரவரி ’26.

Monday, February 16, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 16 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஆறாம் வாரம், திங்கள்
யாக் 1:1-11. மாற் 8:11-13

 

அடையாளம் கேட்பதேன்?

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்கள் வந்து அவரோடு வாதாடுகிறார்கள். அடையாளம் ஒன்று கேட்கிறார்கள். இயேசு அடையாளம் தர மறுக்கிறார்.

 

அடையாளம் என்றால் முதலில் ஒரு குறியீடு. காணக்கூடிய அந்தக் குறி காண இயலாத ஒன்றை நோக்கி நம் எண்ணத்தைத் திருப்புகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் கொடி என்பது ஓர் அடையாளம். அந்தக் கொடியைப் பார்க்கிற ஒருவர் ‘காண இயலாத’ நாட்டை அல்லது நாட்டின் எல்கையைக் காண்கிறார். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு அடையாளங்கள் பயன்பட்டாலும், அடையாளங்கள் தங்களிலேயே வலுவற்றவை. ஏனெனில், கொடியின் நிறங்கள் மற்றும் அமைப்பு பற்றி அறியாத வெளிநாட்டவர் ஒருவருக்கு அந்தக் கொடி எதையும் குறிப்பதில்லை. அவரைப் பொருத்தவரையில் அவர் காண்பது வண்ணங்கள் பூசப்பட்ட சிறு துணி அது! அவ்வளவுதான்.

 

இயேசுவே ஓர் அடையாளம் என்பதை மறந்துவிடுகிறார்கள் அவருடைய எதிரிகள். இயேசுவின் போதனை, வல்ல செயல்கள், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை அனைத்துமே அவர் யார் என்பதை அடையாளப்படுத்தவே செய்கின்றன. அவற்றை அடையாளங்களாகப் பார்ப்பதை விடுத்து, இயேசுவை நம்புவதற்காக வானிலிருந்து இன்னோர் அடையாளம் – ஒரு குரல் அல்லது வெளிச்சம் – கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு அடையாளம் வழங்க மறுக்கிறார். இப்படித்தான் இயேசு சோதனகளை எதிர்கொள்கிறார். இயேசு ஒரு வேளை அடையாளம் ஏதாவது கொடுத்திருந்தால், அவர்கள் இயேசுவைக் கேலி செய்து வழிநடந்திருப்பார்கள்.

 

நம்மால் அனைத்தையும் செய்ய இயலும் என்றாலும், நாம் சில நேரங்களில் செயலாற்றாமல் இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறது இந்த நிகழ்வு. சோதனையை வெல்வதற்கான வழி அதற்கு ‘இல்லை!’ எனச் சொல்வதுதான். மேலும், உள்ளார்ந்த கட்டின்மை அல்லது உள்மனச் சுதந்திரம் பெற்றிருக்கிற ஒருவரே, ‘இல்லை!’ எனச் சொல்ல முடியும். அடையாளம் காட்டி நம்பிக்கையாளர்களை ஈர்க்க இயேசு முயற்சி செய்திருந்தால் அவரை ஒரு மாய வித்தைக்காரர் என்று சொல்லியிருப்பார்கள் அவருடைய சமகாலத்தவர்.

 

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமடலின் தொடக்கப் பகுதியை வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டின் ஞானநூல் என அழைக்கப்படுகிற இத்திருமடல் எண்ணற்ற ஞானக் கூற்றுகளைக் கொண்டுள்ளது. துன்பம், சோதிக்கப்படுதல், நம்பிக்கை, செல்வத்தின் நிலையாமை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது இன்றைய முதல் வாசகம். ‘இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடமிருந்து எதையும் பெற இயலாது’ என்கிறார் யாக்கோபு. இருமனம் கொண்டிருத்தல் குழப்பத்தை உண்டாக்குகிறது. இருமனம் கொண்டிருப்பவர் தன்னிலேயே நிலையற்றவராக இருக்கிறார். இயேசுவிடம் அடையாளம் கேட்டுச் சோதிப்பவர்கள் இருமனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

‘இரண்டு மான்களை விரட்டுபவர் ஒரு மானையும் பிடிப்பதில்லை’ என்பது பழமொழி. நம் வாழ்வின் இலக்குகள், நாம் செய்யும் செயல்கள், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை அனைத்திலும் இரண்டு மனம் விடுத்து ஒற்றை மனத்துடன் செயல்பட இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை அழைக்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: