• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இரக்கமும் அகிம்சையும். இன்றைய இறைமொழி. திங்கள், 16 ஜூன் ’25.

Monday, June 16, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Law of Mercy Law of Retaliation Non-Violence Christian Persecution

இன்றைய இறைமொழி
திங்கள், 16 ஜூன் ’25
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – திங்கள்
2 கொரிந்தியர் 6:1-10. மத்தேயு 5:38-42

 

இரக்கமும் அகிம்சையும்

 

”கண்ணுக்குக் கண்,’ ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன். தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.’

 

பேரரசர் ஹமுராபி காலத்தில் உருவான நீதிமுறை ‘பழிக்குப் பழி வாங்குதல்.’ குற்றத்துக்காக வழங்கப்படும் தண்டனையை நெறிப்படுத்துவதாகவும், நீதியின்படி செயல்படுத்துவதாகவும் இது அமைந்தாலும், இதில் வன்மமும் வன்முறையும் இருக்கவே செய்கிறது. என் கண்ணை எடுப்பவருடைய கண்ணை நான் எடுக்கலாம் என்று சட்டம் என் செயலுக்கான வரையறையை நிர்ணயிக்கிறது. இப்படி நான் செயல்படுவதன் வழியாக எனக்குரிய நீதியை நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் இப்படி நான் செயல்படும்போது எனக்கு இழைக்கப்பட்ட துன்பத்தை அல்லது வன்முறையை நான் மற்றவருக்கும் இழைக்கிறேன். மோசேயின் சட்டமும் இத்தகைய நீதிமுறையையே பின்பற்றியது: ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். கைக்குக் கை, காலுக்குக் கால். சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம். கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய் … முறிவுக்கு முறிவு … நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே. உயிருக்கு உயிர்’ (விப 21:23-25. லேவி 24:1-20. இச 19:21). தீமையை அளவிடவும், வரையறுக்கவும், நீதியை நிலைநாட்டவும் உதவக்கூடிய இத்தகைய சட்டத்தை மாற்றுகிறார் இயேசு. இரக்கம், பொறுமை, தாராள உள்ளம் ஆகியவற்றின் வழியாக தீமையை எதிர்க்க முடியும் என்பது இயேசுவின் கட்டளை. மன்னிப்பு, ஒப்புரவு, எதிரிகளுக்கு அன்பு ஆகியவற்றின் வழியாக இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறார்.

 

தந்தையின் அன்பை வெளிப்படுத்துகிற இயேசு, பழிவாங்குதல் என்னும் சட்டத்தை இரக்கத்தினால் நிரப்புகிறார் (‘திவெஸ் இன் மிஸெரிகோர்தியா,’ 14). கிறிஸ்தவ அறநெறி என்பது பழிவாங்குதல் அல்ல, மாறாக தற்கையளிப்புநிறை அன்பு (திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்). மன்னிப்பே கிறிஸ்தவ இறைவேண்டலின் உச்சம். இதன் வழியாகவே நாம் கடவுளோடு ஒப்புரவாக முடியும் (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, எண். 2844).

 

கண்ணுக்குக் கண் என்று நாம் வன்முறையைத் தொடர்ந்தால் இந்த உலகில் உள்ள அனைவரும் கண்களை இழப்பர் என்கிறார் மகாத்மா காந்தி. நமக்கு நடக்கும் தீமைக்குப் பழிதீர்க்க நினைக்கும் நாம், நாம் மற்றவர்களுக்கு நிகழ்த்தும் தீங்கு மன்னிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். நீதியையும் தாண்டிய இரக்கமே மேன்மையானது. இந்த நிலைக்குச் செல்வது மிகவும் கடினமான செயல். ஏனெனில், மற்றவர்கள் நமக்கு இழைத்த தீங்கு எப்போதும் நம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும். வலது கன்னத்தில் என்னை அறைபவருக்கு என் இடது கன்னத்தைக் காட்டும்போது என் தன்மதிப்பை நான் முன்மொழிகிறேன். என் அங்கியை எடுத்துக்கொள்பவருக்கு என் மேலாடையையும் அளிப்பதன் வழியாக என் நிர்வாணம் அவருடைய மனமாற்றத்திக்குக் காரணமாக மாற வழி வகுக்கிறேன். ஒரு கல் தாண்டி மறு கல்வி செல்வதன் வழியாக என்னை வற்புறுத்தியவர் மனம் வருந்தச் செய்கிறேன்.

 

நம் குடும்பத்தில், பணித்தளத்தில், சமூகத்தில் நமக்கு தீமை இழைக்கப்படும்போது, உடனடியாக எதிர்வினை ஆற்றாமல், சற்றே அமர்ந்து நிகழ்வைத் திறனாய்வு செய்து அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும்.

 

‘எனக்குத் தீங்கிழைத்தவரைப் போல நான் தீங்கிழைக்காமல் இருப்பதே நான் அவருக்குக் காட்டும் எதிர்வினை’ – மார்குஸ் அவுரேலியுஸ். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ – குறள் 314.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: