• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நிறைவுள்ளவராதல். இன்றைய இறைமொழி. செவ்வாய், 17 ஜூன் ’25.

Tuesday, June 17, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Christian Persecution Love for Enemy Commandment of Love Prayer for Enemy Mercy of God Radical Prayer Perfection

இன்றைய இறைமொழி
செவ்வாய், 17 ஜூன் ’25
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – செவ்வாய்
2 கொரிந்தியர் 8:1-9. மத்தேயு 5:43-48

 

நிறைவுள்ளவராதல்

 

‘உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்’

 

‘அயலாருக்கு அன்பு’ என்னும் கட்டளைக்குப் புதிய விளக்கம் தருகிறார் இயேசு. ‘அயலாருக்கு அன்பு’ என்பது பழைய ஏற்பாட்டுக் கட்டளை (லேவி 19:18). ‘பகைவருக்கு வெறுப்பு’ என்னும் கட்டளை பழைய ஏற்பாட்டில் இல்லை. ஆனால், கும்ரான் குகையில் வாழ்ந்து வந்த எஸ்ஸீனியர்களின் போதனை, ‘நம் குழுமத்தைச் சாராத அனைவரும் நமக்கு எதிரிகளே. அவர்களை நாம் வெறுக்க வேண்டும்’ என்று இருந்தது. இந்த இரண்டு கட்டளைகளையும் எடுத்தாளுகிற இயேசு, ‘பகைவரிடமும் அன்புகூருங்கள்!’ என்று தம் சீடர்களுக்குக் கட்டளையிடுகிறார். அனைவர்மேலும் வீசுகிற கதிரவன், பெய்கிற மழை என்று நம் அன்பு பாகுபாடு பாராட்டாமல் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை. ‘இப்படிச் செய்வதால் நீங்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாக இருப்பீர்கள்’ என்கிற இயேசு. இறுதியில் ‘விண்ணகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக வாழ’ அழைக்கிறார்.

 

பகைவருக்கு அன்பு என்பதே கிறிஸ்தவ அறநெறியின் உச்சமாகும். கடவுள் நம்மை முதலில் அன்பு செய்ததால் இது சாத்தியமாகிறது (‘தேயுஸ் காரித்தாஸ் எஸ்த்’, 14). பகைவருக்கும் அன்பு என்னும் இயேசுவின் கட்டளையில் மனித மாண்பும் ஒப்புரவின் மாதிரியும் அடங்கியுள்ளது (‘கௌதியும் எத் ஸ்பெஸ்,’ 28, 78).

 

பல ஆண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலோ அவர்கள் வெளிவந்தவுடன் அவர் அவரைச் சிறையிலடைத்தவர்கள்மேல் வெறுப்பு காட்டுவார் என நினைத்தார்கள். ஆனால், வெறுப்பு வெறுப்பையே பெற்றெடுக்கும் என்று சொன்ன அவர், வெறுப்பை அன்பின் வழியாக வெற்றிகொள்ள முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.

 

நாம் மற்றவர்களுக்குக் காட்டும் மன்னிப்பு பல நேரங்களில் வலுவின்மையின் அடையாளமாக, கையறுநிலையின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. மன்னிப்பு என்பது மனத்துணிவின் அடையாளமாகும். மன்னிக்கிற ஒருவர் கடந்தகாலத்தின் காயத்திலிருந்து விடுதலை பெற்றவர் ஆகிறார். மன்னிக்கிற ஒருவர் நிகழ்காலத்தில் வாழத் தொடங்குகிறார். அவர் கடவுளைப் போல ‘இன்று’ என்று அனைத்தையும் புதியதாகத் தொடங்குகிறார்.

 

‘குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடுகிறவர். குற்றத்தைத் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறவர் நட்பை முறிப்பார்’ (நீதிமொழிகள் 17:9)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: