இன்றைய இறைமொழி
புதன், 18 ஜூன் ’25
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – புதன்
2 கொரிந்தியர் 9:6-11. மத்தேயு 6:1-6, 16-18
‘மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.’
நோன்பு, பிறரன்புச் செயல், இறைவேண்டல் ஆகிய மூன்றும் யூத சமய பக்தியின் அடிப்படையான தூண்கள் என்று கருதப்பட்டன. தோரா, இறைவாக்கு நூல்கள், ரபி இலக்கியங்கள் ஆகியவை மேற்காணும் மூன்றையும் வலியுறுத்தின. இம்மூன்றும் மனமாற்றம் (டெஷூவா), நேர்மை (ட்செதேக்கா), அர்ப்பணம் (அவோடா) ஆகியவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது அவற்றின் நோக்கமாக இருந்தது. ஆனால், இயேசுவின் காலத்தில் இவை வெறும் சடங்குகளாகவும், மற்றவர்கள்முன் நற்பெயர் வாங்குவதற்காகச் செய்யப்படுகிற செயல்களாகவும் மாறின. நோன்பு என்றால் உணவு மறுத்தல் மட்டுமல்ல, மாறாக, கடவுளை நோக்கி இதயத்தைத் திருப்புதல் (யோவேல் 2:12-13). பாவக்கழுவாய் நாளில் நோன்பு இருத்தல் முதன்மையான கடமையாகும் (லேவியர் 16:29-31). தர்மம் செய்தல் அல்லது பிறரன்புச் செயல் மற்றவரைத் தன்நிறைவு கொண்டதாக மாற்றுகிறது (இணைச்சட்டம் 15:7-8). இறைவேண்டல் என்பது கடவுளோடு மனிதர்கள் மேற்கொள்கிற உரையாடல் (தானியேல் 6:10). மற்றவர்களை நோக்கிய திசையை ஒவ்வொருவருடைய உள்ளம் நோக்கியதாகத் திருப்புகிறார் இயேசு.
நோன்பு இருத்தல் என்பது தன்அன்பு. பசியை விரும்பி ஏற்பதன் வழியாக ஒருவர் தன்னைத் தானே தூய்மையாக்கிக் கொள்கிறார். தர்மம் செய்தல் வழியாக ஒருவர் மற்றவரோடு உள்ள அன்புநிலையைச் சரி செய்கிறார். இறைவேண்டல் வழியாக நாம் இறையன்பை நெறிப்படுத்துகிறோம் (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, 1434).
திருநீற்றுப் புதன் அன்று நற்செய்திப் பகுதியாக நாம் வாசிக்கிற இந்த வாசகத்தின் வழியாக, ‘நோன்பு,’ ‘பிறரன்புச் செயல்,’ ‘இறைவேண்டல்’ ஆகியவற்றை நம் வாழ்வின் அடித்தளங்களாக வரையறுக்கின்றன. மனிதர் தருகிற கைம்மாற்றை விட கடவுள் தருகிற கைம்மாறு உயர்ந்தது.
சமயம் நம்மை நம்மோடும் ஒருவர் மற்றவரோடும் கடவுளோடும் இணைப்பதற்குப் பதிலாக, பல நேரங்களில் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிடுகிறது. யாருடைய கடவுள் உண்மையான கடவுள்? என்று நிரூபிப்பதிலேயே நம் நேரம் கடந்துவிடுகிறது. கடவுள் நம்மை இணைப்பதற்குப் பதிலாக பிரிக்கும் காரணியாக மாறிவிடுகிறார். நோன்பு, தர்மம் செய்தல், இறைவேண்டல் போன்றவை சமயங்களைத் தாண்டி அனைத்து மாந்தர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. பொதுவானவற்றை மையமாகக் கொண்டு நம் வாழ்வைத் தொடங்குதல் நலம்.
‘மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்’
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: