• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கல்லறையில் தேடுவதேன்? இன்றைய இறைமொழி. சனி, 19 ஏப்ரல் ’25.

Saturday, April 19, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
சனி, 19 ஏப்ரல் ’25
பாஸ்கா திருவிழிப்பு
நற்செய்தி வாசகம் லூக்கா 24:1-12

 

கல்லறையில் தேடுவதேன்?

 

ஒரு கிராமத்தின் மூலையில் துறவுமடம் ஒன்று இருந்தது. சுற்றிக் கட்டப்பட்ட கற்சுவர்களுக்குப் பின் அழகான தோட்டம் ஒன்று இருந்தது. முன்னொரு காலத்தில் துறவியர் அத்தோட்டத்தில் வேலை செய்தார்கள். அது இறைவேண்டலின் இடமாகவும் இருந்தது. ஒலிவ மரங்கள், ரோஜா செடிகள், லில்லி மலர்கள் என நிறைந்திருந்த அங்கே இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

 

ஆண்டுகள் கடந்தபின் அனைத்தும் மாறியது.

 

தோட்டத்தைக் கவனிக்கும் துறவி இறந்துவிட்டதால், தோட்டம் கேட்பாரற்றுக் கிடந்தது. வேலிகள் உடையத் தொடங்கின. களைகள் முளைத்தன. தோட்டம் பூட்டப்பட்டது. அது இருப்பதையே துறவியர்களும் ஊராரும் மறந்து போனார்கள்.

 

உயிர்ப்புப் பெருவிழா வந்தது. இரவு திருவிழிப்புத் திருப்பலிக்குப் பின்னர் இளந்துறவி ஒருவர் தோட்டத்துக்கு அருகில் வந்தார். ‘உயிருள்ளவரைக் கல்லறையில் தேடுவது ஏன்? அவர் இங்கே இல்லை. உயிர்த்துவிட்டார்!’ என்று அவர் கேட்ட நற்செய்தி வாசகம் அவருடைய உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

 

அந்த இரவிலேயே தன் அறைக்குச் சென்று இலாந்தர் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார். தோட்டத்தின் சாவியைக் கண்டுபிடித்துத் திறந்து தோட்டத்துள் நுழைந்தார்.

 

ஒரு பக்கம் முட்களும் களைகளும் நிறைந்திருந்தாலும் இன்னொரு பக்கம் புதிதாக லீலி மலர்கள் பூத்திருந்தன. அவற்றின்முன் மௌனமாக அமர்ந்தார் இளந்துறவி.

 

அவருடைய உள்ளத்திலே உயிர்த்த ஆண்டவரின் குரல் கேட்டது: ‘உயிருள்ளவரைக் கல்லறையில் தேடுவதேன்? பூட்டப்பட்ட இடங்களிலும் மறக்கப்பட்ட பயங்களிலும் இல்லை நான். இதோ, நான் வளர்ந்துவரும், மலர்ந்து நிற்கும் அனைத்திலும் இருக்கிறேன்.’

 

அந்த இரவிலிருந்து தோட்டம் மீண்டும் திறக்கப்பட்டது. ஊர்க்காரர்கள் உள்ளே வந்தார்கள். குழந்தைகள் விளையாடினார்கள். துறவியர்கள் மீண்டும் பாடத் தொடங்கினார்கள்.

 

தோட்டம் இறக்கவில்லை. அதைத் திறப்பவருக்காகக் காத்திருந்தது.

 

நிற்க.

 

இன்று நாம் கொண்டாடுகிற உயிர்ப்பு திருவிழிப்பு கடந்த கால நிகழ்வு அல்ல. மாறாக, இது ஓர் அன்றாட நிகழ்வு. இயேசு தினமும் நம் முன்னே செல்கிறார்.

 

இன்று நாம் கேட்ட வாசகங்களின் பின்புலத்தில் பார்க்கும்போது உயிர்ப்பு என்பது ஒரு பயணம். படைப்பிலிருந்து புதிய படைப்பு நோக்கிய, அடிமைத்தளையிலிருந்து விடுதலை நோக்கிய, இறப்பிலுருந்து உயிர்ப்பு நோக்கிய பயணம்.

 

(அ) படைக்கும், புதியதாக்கும் கடவுள்

 

படைப்பு அனைத்தையும் அழகானது எனக் காண்கிறார் கடவுள் (தொநூ 1). புதிய இதயத்தை இஸ்ரயேல் மக்களுக்கு அருள்வதாக வாக்களிக்கிறார் (எசே 36). கடவுள் பேசத் தொடங்கியவுடன் படைப்பு உருவாகிறது. கிறிஸ்துவில் புதிய படைப்பு உருவாகிறது.

 

(ஆ) விடுவிக்கும், வழிநடத்தும் கடவுள்

 

உயிர்ப்புக் கொண்டாட்டம் நம் புதிய விடுதலைப் பயணம் ஆகும். இயேசுவின் உயிர்ப்பு நமக்கும் வெற்றியாக மாறுகிறது. ஏனெனில், நாமும் பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறோம். நாம் அடிமைகள் அல்ல, மாறாக, கடவுளுடைய புதல்வர்கள், புதல்வியர்கள்.

 

(இ) நம்மைத் தூக்கிவிடும் அனுப்பும் கடவுள்

 

துன்பத்தோடு வந்த பெண்கள் கேள்வியை எதிர்கொள்கிறார்கள்: ‘உயிரோடு இருப்பவரை கல்லறைகளில் தேடுவதேன்?’

 

வாழ்வற்றவற்றை, வாழ்வு தர இயலாதவற்றை நாம் விட்டுவிட்டு கிறிஸ்துவைத் தழுவிக்கொள்ளும் நாள் இது.

 

இந்த இரவு புதிய தொடக்கங்களின் இரவாக அமைகிறது.

 

அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்துவிட்டார்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: