• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கட்டளைகளைக் கடைப்பிடித்தல். இன்றைய இறைமொழி. திங்கள், 19 மே ’25.

Monday, May 19, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
திங்கள், 19 மே ’25
பாஸ்கா ஐந்தாம் வாரம் – திங்கள்
திருத்தூதர் பணிகள் 14:5-18. யோவான் 14:21-26

 

கட்டளைகளைக் கடைப்பிடித்தல்

 

இயேசுவின் பிரியாவிடை உரையில் பல கருத்துகள் திரும்பத் திரும்ப வருகின்றன. சில விடயங்களின் பொருள் நமக்கு நேரிடையாக விளங்குவதில்லை. அன்புக் கட்டளை கொடுக்கின்ற இயேசு, தொடர்ந்து அதைப் பற்றியே பேசுகின்றார்.

 

‘நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்’ என்று சொல்கின்ற இயேசு தன் சீடர்களுக்கு அன்புக் கட்டளை வழங்குகின்றார். ஆனால், தொடர்ந்து, ‘என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்’ எனப் போதிக்கிறார். ‘கட்டளைகள்’ என இயேசு பன்மையில் குறிப்பிடுவது எது? மேலும், ‘நான் உங்கள்மீது அன்பு கூர்வது போல நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கூருங்கள்’ எனச் சொல்கின்ற இயேசு, இங்கே, ‘என் மீது அவர் அன்புகூர்ந்துள்ளார்’ என அன்பின் திசையைத் தன் பக்கம் திருப்புகின்றார். பின்னர் தொடர்ந்து, ‘அன்பு செய்யும் ஒருவரே நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்’ என மொழிகின்றார்.

 

அன்பு, கட்டளை, வார்த்தை, கீழ்ப்படிதல், கடைப்பிடித்தல் என நகரும் இந்த நற்செய்தி வாசகப் பகுதியை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

 

‘கட்டளைகள்’ என்பதை ‘வார்த்தைகள்’ என எடுத்துக்கொள்வோம்.

 

இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த வாசகப் பகுதி:

 

ஒன்று, இதன் வழியாக நாம் கடவுளை அன்புகூர்கிறோம்.

 

இரண்டு, கடவுள் நம்மில் வந்து தங்கும் அளவுக்கு நம்மைத் தயாராக்குகிறோம்.

 

மூன்று, தூய ஆவியாரை உள்ளத்தில் பெறும் நாம் அவரால் கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.

 

இயேசுவின் விண்ணேற்றத் திருவிழா நெருங்கி வருகின்ற வேளையில், வாசகங்கள் அதற்கான தயாரிப்புக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்பதை மனத்தில் கொள்வோம்.

 

இன்றைய முதல் வாசகத்தில் (திப 14:5-18) லிஸ்திராவில் கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு நலம் தருகின்ற பவுல் மற்றும் பர்னபாவைக் காண்கின்ற மக்கள், ‘தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன’ என்று சொல்லி, அவர்களுக்குப் பலியிட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுடைய புரிதலைத் திருத்துகின்ற பவுல், ‘பயனற்ற பொருள்களை விட்டுவிட்டுக் கடவுளிடம் திரும்புங்கள்’ என அறிவுறுத்துகின்றார்.

 

கொஞ்ச நேரம் நாம் அமர்ந்து யோசித்துப் பார்த்தால், கடவுளிடம் திரும்புவதைத் தவிர மற்ற அனைத்துமே பயனற்றவை என்றே தோன்றுகின்றது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: