இன்றைய இறைமொழி
வியாழன், 19 ஜூன் ’25
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – வியாழன்
2 கொரிந்தியர் 11:1-11. மத்தேயு 6:7-15
‘மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்’
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இறைவேண்டல் பற்றி தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிற இயேசு, ‘மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போக வேண்டாம்’ என்கிறார். நம் சொற்கள் கடவுளுடைய மேன்மையைக் கூட்டுவதும் குறைப்பதும் இல்லை. அவருடைய நன்மைத்தனம் என்றென்றும் ஒரே மாதிரியாக உள்ளது. தந்தை என்னும் நிலையில் அவர் தம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்தவராக இருக்கிறார். இரண்டாவது பகுதியில், இறைவேண்டலின் ஒரு பகுதியாக மன்னிப்பை வலியுறுத்துகிற இயேசு, நாம் ஒருவர் மற்றவரை மன்னிக்கும்போது கடவுளின் மன்னிப்புக்கு வழிவகுக்கிறோம் என்கிறார். கடவுளுடைய மன்னிப்பு நிபந்தனைக்கு உட்பட்டது அன்று. மாறாக, கடவுளுடைய மன்னிப்பு ஒருவர் மற்றவரை நாம் மன்னிப்பதற்கான அளவுகோலாக இருக்கிறது. இறைவேண்டலின் ஒரு பகுதியாக இயேசு மன்னிப்பு பற்றிப் பேசுவது, நாம் ஒருவர் மற்றவரோடு ஒப்புரவாக வேண்டும் என்பதற்கான அழைப்பாகவும் இருக்கிறது.
உண்மையான அமைதியின் அடித்தளம் மன்னிப்பே (‘ப்ரதெல்லி தூத்தி,’ 252). ஒப்புரவுக்கான முதல் படி மன்னிப்பு. இதன் வழியாகவே நாம் கடவுளோடு ஒப்புரவாகிறோம் (‘திவெஸ் இன் மிஸரிகோர்தியா,’ 14).
தன் நண்பர் ஒருவரைத் தன்னால் மன்னிக்க இயலவில்லை என்று கருதிய ஒருவர் அருள்பணியாளரைச் சந்திக்கச் சென்றார். ‘நான் எவ்வளவோ முயற்சி செய்தும், செபம் செய்தும், அவனை மன்னிக்க என்னால் இயலவில்லை. ஏனெனில், அவன் ஏற்படுத்திய காயம் பெரிது!’ என்றார். இதைக் கேட்ட அருள்பணியாளர் அவரை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த திருச்சிலுவையைக் காட்டுகிறார். ‘மன்னிப்பு என்பது காயத்தை மறப்பது அல்ல. மாறாக, காயத்தைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்காமல் இருப்பது’ எனக் கற்றுக்கொடுக்கிறார். உயிர்த்த ஆண்டவர் காயங்களோடு நிற்கிறார். அவருடைய காயங்களால் நாம் குணமடைந்துள்ளோம் எனில், நாம் ஒருவர் மற்றவரைக் காயப்படுத்த வேண்டாம்.
மன்னித்தலும் மறத்தலும் இணைந்தே செல்கின்றன என நாம் கேள்விப்படுகிறோம். மன்னித்தாலும் சில நேரங்களில் நாம் மறக்க முடிவதில்லை. மன்னிக்கத் தொடங்கியவுடன் நாம் கடவுளாக மாறிவிடுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: