• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

செல்வமும் உள்ளமும். இன்றைய இறைமொழி. வெள்ளி, 20 ஜூன் ’25.

Friday, June 20, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Light and Darkness Inner Light Lamp of Body Treasures on Earth Treasures in Heaven

இன்றைய இறைமொழி
வெள்ளி, 20 ஜூன் ’25
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – வெள்ளி
2 கொரிந்தியர் 11:18, 21-30. மத்தேயு 6:19-23

 

செல்வமும் உள்ளமும்

 

‘கண் நலமாயிருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஒளிபெற்றிருக்கும்’

 

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மிடம் இரு கேள்விகளை முன்வைக்கின்றது: ‘உன் செல்வம் எங்கே?’ ‘உன் இதயம் எங்கே?’ என்ற கேள்விக்கான விடையே, செல்வம் எங்கே இருக்கிறது என்பதற்கான விடை. ஏனெனில், ‘உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’ என்கிறார் இயேசு.

 

இரண்டாவது கேள்வி, ‘உன் பார்வை எங்கே?’ – ‘உன் கண்கள் எங்கே?’ என்பதற்கான விடையே இக்கேள்விக்கான விடை. ‘கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்’ என்கிறார் இயேசு.

 

இவ்விரண்டு கேள்விகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருந்தாலும், இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையவை. எப்படி?

 

தாவீது அரசர் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் உறவு கொண்ட நிகழ்வை எடுத்துக்கொள்வோம். அவருடைய பார்வை முதலில் அந்த இளவல்மேல் இருந்தது. ஆனால், அந்தப் பார்வையை ஆசை மறைத்துவிட்டதால், அவருடைய உடல் ஒளியை இழந்துவிட்டது. இளவல்தான் அவருடைய செல்வமாகத் தெரிந்தார். ஏனெனில், தாவீது அரசரின் உள்ளம் அந்த இளவல்மேல் இருந்தது. ஆக, நான் எதைப் பார்க்கிறேனோ அது என் செல்வமாகிறது. அந்தச் செல்வத்தின்மேல் என் உள்ளம் பதிந்துவிடுகிறது.

 

யோசுவா நூலில் (அதி. 16) ஒரு நிகழ்வு உண்டு. எரிக்கோ நகருக்கு எதிராக மக்கள் போரிடுகின்றனர். அங்கிருக்கும் அனைத்தையும் அழித்துவிடுமாறு ஆண்டவராகிய கடவுள் அறிவுறுத்துகின்றார். ஆனால், ஆக்கான் என்பவரின் கண்கள் அங்கிருந்த பொன் மற்றும் வெள்ளிமேல் படிகிறது. அவற்றை அவர் எடுத்து மறைத்துவைத்துக் கொள்கின்றார். அவருடைய எண்ணமெல்லாம் மறைத்து வைக்கப்பட்ட பொன் மேல் இருக்கின்றது. விளைவு, ஏய் நகருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோல்வியடைகின்றனர்.

 

இரு சவால்கள்:

 

ஒன்று, நம் கண்கள் நலமானதாக இருக்க வேண்டும். அதாவது, பொறாமை, பகைமை, ஆசை, கோபம் கொண்டதாக இருத்தல் கூடாது.

 

இரண்டு, நம் செல்வம் இறைவனாக வேண்டும். அவரில் நம் இதயம் இருக்க வேண்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: