• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தீர்ப்பும் குற்றங்கடிதலும். இன்றைய இறைமொழி. திங்கள், 23 ஜூன் ’25.

Monday, June 23, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 23 ஜூன் ’25
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – திங்கள்
தொடக்கநூல் 12:1-9. மத்தேயு 7:1-5

 

தீர்ப்பும் குற்றங்கடிதலும்

 

‘நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்’

 

தனிப்பட்ட வாழ்வுசார்ந்த அறநெறியோடு இணைந்து குழும அறநெறியையும் இயேசுவின் மலைப்பொழிவு கற்பிக்கிறது. சீடர்களின் குழும வாழ்வு மேன்மையானதாக இருப்பதற்கு இயேசு இரண்டு அறிவுரைகளை வழங்குகிறார்: (அ) ‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்.’ (ஆ) ‘தன்னாய்வு செய்து பார்க்காமல் மற்றவர்களின் குற்றங்களைக் களைய முயற்சி செய்யாதீர்கள்.’ நாம் மற்றவர்களுக்கு வழங்கும் தீர்ப்பு நமக்கே வரும் என்பதும், நாம் மற்றவர்களுக்குப் பயன்படுத்தும் அளவையைக் கொண்டே மற்றவர்கள் நம்மை அளப்பார்கள் என்பதும் இயேசு வழங்கும் கூடுதல் பாடம். கிரேக்கத்தில் ‘மே க்ரிநெடே’ என்று ஒற்றை வினைச்சொல்லாகத் தரப்பட்டுள்ளது ,ந்த அறிவுரை. ‘க்ரினோ’ என்னும் வினைச்சொல்லுக்கு, ‘தீர்ப்பிடுதல், குற்றம் சுமத்துதல், அளவிடுதல், விமர்சனம் செய்தல்’ என்று பல பொருள்கள் உண்டு.

 

ஒரு பொருளை அல்லது நபரை நாம் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே அதை அளவிடுகிறோம், அல்லது விமர்சனம் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, என் கண் யாராவது ஒருவர் ஒரு புத்தகத்தை நீட்டினால், அதை வெறும் புத்தகம் என்று பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், என் மூளை உடனடியாக அதை அளவிடுகிறது அல்லது விமர்சனம் செய்கிறது. புத்தகத்தின் தலைப்பு, புத்தகம் எழுதப்பட்ட மொழி, புத்தகத்தின் தடிமன், அட்டையின் நிறம், புத்தகத்தின் வழுவழுப்பு என அனைத்தையும் அளவிட்டு, விமர்சனம் செய்கிறது. இவ்வளவு விமர்சனமும் இணைந்து அந்தப் புத்தகத்திற்கும் எனக்கும் இடையே ஒரு திரையாக நின்றுகொள்கிறது.

 

‘தீர்ப்பு அளித்தல்’ என்பது குற்றவியல் அல்லது வழக்குரைத்தல் சொல்லாடல். நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி ஒரு வழக்கை தீர விசாரித்தபின் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தீர்ப்பு வழங்குகிறார். அன்றாட வாழ்வில் இது எப்படி நடக்கிறது? நாம் ஒருவரைப் பார்க்கும் நொடியில் அவரைத் தீர்ப்பிட்டு விடுகிறோம் என்பதே வாழ்வியல் எதார்த்தம். ஒருவரை நாம் தீர்ப்பிடும் கண்கள் கொண்டே – ஆணா, பெண்ணா, கறுப்பா, சிகப்பா, குண்டா, ஒல்லியா, நல்லவரா, கெட்டவரா, பிடித்தவரா, பிடிக்காதவரா என்று – பார்க்கிறோம். தீர்ப்பிடும் அந்த நொடியில் அவருக்கும் நமக்கும் இடையே ஒரு திரையை உருவாக்கிவிடுகிறோம். அந்தத் திரையின் பாதுகாப்பில் நாம் ஒளிந்துகொள்கிறோம். மற்றவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுதல் நம் கடமையாக இருந்தாலும், மற்றவரிடம் உள்ள தவற்றைச் சுட்டிக்காட்டும்போது அது நம்மிடம் உள்ளதா என்று பார்த்து, வலுவற்ற அவருடைய இயல்பு நம்மிடமும் இருக்கிறது என உணர்ந்து, அவர்மேல் இரக்கமும் பரிவும் நாம் காட்ட வேண்டும்.

 

நாம் ஒருவருடைய குறை அல்லது குற்றத்தைக் கண்டிக்கும்போது நாம் அந்த நபரின் செயலைக் கடிந்துரைக்கிறோமே தவிர, அவரைக் கடிந்துகொள்வதில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும் (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, 1861). நம்மை விட வேறுபட்டுச் சிந்திப்பவர்கள் அல்லது செயலாற்றுபவர்கள்மேலும் நமக்கு மதிப்பும் அன்பும் இருக்க வேண்டும் (கௌதியும் எத் ஸ்பெஸ், 28). நமக்கு எல்லாம் தெரியும் என்னும் மனப்பாங்கிலிருந்தே நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம். மற்றவர்களுடைய வாழ்வுக் கதையைத் தெரிந்துகொள்ளாமலேயே அவர்களைத் தீர்ப்பிடுவது பிரிவினையை ஏற்படுத்துமே தவிர, அமைதியை ஏற்படுத்தாது (ஃப்ரதெல்லி தூத்தி, 222).

 

ஆசிரியர் ஒருவர் தம் மாணவர்களிடம், வகுப்பறையின் ஜன்னல்களைத் துடைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜன்னல் வழியே வெளியே தெரிந்த தோட்டத்தைப் பார்த்த மாணவர் ஒருவர், ‘தோட்டம் அழுக்காகவும் ஒழுங்கற்றும் இருக்கிறது’ என்றார். உடனடியாக ஜன்னலைத் துடைத்த ஆசிரியர், ‘இப்போது பார்! தோட்டம் அல்ல, ஜன்னலே அழுக்காக இருக்கிறது. மற்றவர்களைப் பற்றிய தீர்ப்புகள் எல்லாம் நம் ஜன்னலின் சகதியே. மற்றவர்களை நாம் தீர்ப்பிடும் முன் நம் இதயங்களை நாம் தூய்மைப்படுத்துவோம்!’ என்றார்.

 

‘விமர்சனம் இல்லாத பார்வையே மனமுதிர்ச்சியின் அடையாளம்’ என்கிறார் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. வெறும் மலரை மலராகவும், மலையை மலையாகவும், ஆளை ஆளாகவும் மட்டும் பார்த்தல் சிறப்பு.

 

தூர நாட்டிலிருந்து இல்லம் திரும்பி வந்த தன் இளைய மகனுக்காகக் காத்திருக்கிற தந்தை, ‘என்னப்பா இப்படி வந்துருக்க?’ என்று கேட்கவில்லை. வந்த மகனை அப்படியே தழுவிக்கொள்கிறார். அதுதான் தீர்ப்பு அளிக்காத பார்வை. விமர்சனம் செய்யாத மூளை. அவன் வந்து நின்ற நிலையை விமர்சனம் செய்துபார்த்தால் அவனைத் தழுவியிருக்க இயலாது அவரால். தன் மகனை மகன் என்று மட்டுமே பார்க்கிறார். ஆனால், மூத்த மகனோ வந்திருந்த தன் தம்பியைப் பார்க்கிறான், அவனுடைய வெறுங்கையைப் பார்க்கிறான். அவன் பழைய வாழ்க்கையை விமர்சனம் செய்கிறது இவனுடைய மூளை. விளைவு, தன் தம்பி என உழைக்காமல், ‘இந்த உன் மகன்’ என அந்நியப்படுத்துகிறான்.

 

விமர்சனம் இல்லாத பார்வையை நாம் பெறத் தடையாக இருப்பது நம் கண்ணில் உள்ள கட்டை. இந்தக் கட்டை நம் கண்களுக்கு வெளியே இல்லை. மாறாக, நம் மூளையிலிருந்து நம் கண்களை நோக்கியதாக இருக்கிறது. அதை நாம் நீக்கிவிட்டால் விமர்சனம் செய்யாத, தீர்ப்பிடாத, குற்றம் சுமத்தாத பார்வையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிராமை (ஆபிரகாமை) அழைக்கிறார். ‘நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டுக்குச் செல்’ என்னும் குரலைக் கேட்டவுடன் புறப்படுகிறார் ஆபிராம். இதுதான் அவருடைய நம்பிக்கைப் பார்வை. அந்த நம்பிக்கைப் பார்வையில் எந்தவொரு விமர்சனமும், தீர்ப்பும், ஆராய்ச்சியும் இல்லை.

 

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 33) வரிகளில், ‘ஆண்டவர் கண்ணோக்குகிறார்’ என வாசிக்கிறோம். ஆண்டவரின் பார்வை தீர்ப்பிடாத, குற்றம் சுமத்தாத, விமர்சனம் செய்யாத பார்வை. அப்படியே நம் பார்வையும் அமைவதாக!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: