• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஐயம் மறைந்து நம்பிக்கை! இன்றைய இறைமொழி. திங்கள், 24 ஆகஸ்ட் 2026.

Monday, August 24, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 24 ஆகஸ்ட் 2026
புனித பர்த்தலமேயு, திருநாள்
திவெ 21:9-14. யோவா 1:45-51.

 

ஐயம் மறைந்து நம்பிக்கை!

 

இன்று நாம் திருத்தூதரான புனித பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவரை நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியாளர் அழைக்கிறார். இதுதான் இவருடைய இயற்பெயராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ‘பர்த்தலமேயு’ என்றால் அரமேயத்தில் ‘தலமேயுவின் மகன்’ என்றுதான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ‘நத்தனியேல்’ என்றால் ‘கடவுளின் கொடை’ அல்லது ‘கடவுள் கொடுத்தார்’ என்று பொருள்.

 

இயேசுவைக் கண்ட பிலிப்பு தன் நண்பரான நத்தனியேலிடம் போய், ‘அவரை நாங்கள் கண்டுகொண்டோம்’ என்று சொல்ல, அவரோ, ‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?’ என்று தயக்கம் காட்டுகிறார். ஆனால், ‘வந்து பாரும்’ என்று பிலிப்பு அழைத்தவுடன் இயேசுவைச் சென்று பார்க்கிறார்.

 

ஐயத்திலிருந்து நம்பிக்கைக்கு கடந்து செல்கிறார் நத்தனியேல்:

 

  1. நத்தனியேலின் ஐயம் (1:45-46)

 

இயேசுவின் தான்மை பற்றிய ஐயநிலையில் இருக்கிறார் நத்தனியேல். ‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக் கூடுமோ?’ என்னும் அவருடைய கேள்வியில் அவர் கொண்டிருந்த முற்சார்பு எண்ணம் வெளிப்படுகிறது.

 

  1. இறைஅறிவு: இயேசுவின் வெளிப்பாடு (1:47-49)

 

இயேசு நம் ஐயங்களைத் தாண்டி நம்மை அறிந்தவராக இருக்கிறார். நத்தனியேல் யார் – கபடற்றவர் – இயேசு வெளிப்படுத்துகிறார்.

 

  1. திருப்புமுனை: நத்தனியேலின் அறிக்கை (1:49)

 

‘நீரே இறைமகன், இஸ்ரயேல் மக்களின் அரசர்’ என அறிக்கையிடுகிறார் நத்தனியேல். இயேசுவைச் சந்திக்கும் அந்த நொடியில் நம் வாழ்க்கை மாற்றம் அடைகிறது.

 

  1. ‘இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்’ (1:50-51)

 

யாக்கோபு கண்ட கனவை நினைவூட்டுவதன் வழியாக, இயேசு விண்ணகத்துக்கும் மண்ணகத்துக்குமான ஏணியாக மாறுகிறார் என இங்கே முன்னுரைக்கப்படுகிறது.

 

இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்துறக்கிறார் நத்தனியேல் என்னும் பர்த்தலமேயு. இயேசுவைச் சந்திக்கும் அனைவரும் முழுமையான வாழ்வியல் மாற்றத்தைப் பெறுகிறார்கள் என்பது இப்புனிதர்தரும் செய்தியாக இருக்கிறது. இயேசுவோடு இவர் இருந்த நொடிகள் சில என்றாலும் இவர் அடைந்த மாற்றம் பெரியதாக இருக்கிறது.

 

இயேசுவைப் பற்றிய ஐயம் நம் உள்ளத்தில் எழும்போதெல்லாம், ‘வந்து பாரும்’ என்னும் குரல் நம்மை அழைத்துக்கொண்டே இருக்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: