• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

துணையாளர். இன்றைய இறைமொழி. திங்கள், 26 மே ’25.

Monday, May 26, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
திங்கள், 26 மே ’25
பாஸ்கா ஆறாம் வாரம் – திங்கள்
திருத்தூதர் பணிகள் 16:11-15. யோவான் 15:26-16:4

 

துணையாளர்

 

திருத்தூதர்களின் பணி ஒரு பக்கம் தொழுகைக்கூடங்களிலும், பிறசமய ஆலய வளாகங்களிலும் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஆற்றங்கரைகளிலும், காற்றின் தூசியிலும் நடந்தேறுகிறது.

 

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

 

இவர்களில் ‘லீதியா’ என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

 

இவர் ஒரு வியாபாரி. ‘செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்’ என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், செந்நிற அல்லது பிங்க் நிற ஆடைகள் செல்வந்தர்களாலும், அரசவை உறுப்பினர்களாலும், மேட்டுக்குடி மக்களாலும் அணியப்பட்டன. இவர் செய்கிற இந்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.

 

லீதியா வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார். திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எதுவும் ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

 

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

 

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார். லூக்கா அழகாக எழுதுகின்றார்: ‘அதன் பின் லீதியா எங்களிடம், ‘நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.’

 

இங்கே இவரின் இன்னொரு பண்பையும் பார்க்க முடிகிறது.

 

தாராள உள்ளம். லீதியாவுக்கு வயது ஏறக்குயை 20 முதல் 25-க்குள் தான் இருந்திருக்க வேண்டும். தனியாக வாழ்பவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடித்தவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடிக்கத் தயார்நிலையில் இருக்கலாம். பவுலைத் தன் இல்லத்தில் ஏற்கின்றார். தான் பெற்ற நம்பிக்கைக்கு உடனடியாகக் கைம்மாறு செய்கின்றார் லீதியா. இதுதான் இவரின் பண்பு. நாம் செய்வது நமக்கே திரும்பி வரும் என்பது பிரபஞ்சத்தின் விதி. ஆக, மீட்பையும் நம்பிக்கைiயும் இலவசமாக வாங்காமல் அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராகின்றார் லீதியா.

 

இந்த இளவல் நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

 

அ. தன்மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை – இது அவருடைய தொழிலில் வெளிப்பட்டது.

 

ஆ. புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம் – இது அவருடைய மனமாற்றத்தில் வெளிப்பட்டது.

 

இ. அந்நியரை வரவேற்கும் பரந்த மனம் – இது திருத்தூதர்களை ஏற்றுக்கொண்டதில் வெளிப்பட்டது.

 

இன்று தொடங்கி வருகின்ற ஞாயிறு வரை வருகின்ற நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் இயேசுவின் விண்ணேற்றத்திற்கும், அதைத் தொடர்ந்து வருகின்ற தூய ஆவியார் பெருவிழாவுக்குமான முன்னோட்டமாக அமைகின்றன.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய திருத்தூதர்களிடம், ‘தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற தூய ஆவியார் வருவார்’ என மொழிகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் திருத்தூதர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘நீரே எங்களோடு இருக்க எமக்கு ஏன் துணையாளர்?’ என்றும், ‘நீர் எங்களோடு இருக்க மாட்டீரா?’ என்றும் தங்கள் உள்ளங்களில் அவர்கள் கேள்விகள் எழுப்பியிருப்பார்கள்.

 

‘துணையாளர்’ என்னும் வார்த்தை கிரேக்கத்தில், ‘பாராக்ளேட்டோஸ்’ என்று இருக்கிறது. ‘பாராக்ளேஸிஸ்’ என்றால் ‘பரிந்து பேசுதல்,’ அல்லது ‘வழக்காடுதல்,’ அல்லது ‘துணைக்குப் பேசுதல்’ என்பது பொருள். இது ஒரு சட்டம்சார் வார்த்தை. அதாவது, வழக்கு மன்றத்தில் அல்லது நீதிமன்றத்தில் ஒருவருக்காக இன்னொருவர் பரிந்து பேசுவதை, வழக்காடுவதைக் குறிக்கிறது.

 

நான் எனக்கென வழக்காடுவதற்கு ஒருவரை ஏன் நியமிக்கிறேன்?

 

அவர் சட்டம் தெரிந்தவராக இருக்கிறார்.

 

அவர் நன்றாக வாதம் செய்பவராக இருக்கிறார்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக என்னை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாதவராக இருக்கிறார். ஏனெனில், எனக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கும் ஒருவர் திடீரென எனக்கு எதிராகப் பேசினால் என்ன ஆகும்?

 

என் எதிரியை வெற்றிகொள்ள என்னோடு ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு பலம் தருகிறது.

 

இயேசு மொழிகின்ற அந்தத் துணையாளர் யார்?

 

ஒரு பக்கம், நம் உள்ளத்தில் எரிகின்ற நம்பிக்கை ஒளிதான் அந்தத் துணையாளர். ‘எனக்கு எதுவும் நடக்காது’ என்ற எண்ணம் அல்ல, மாறாக, ‘எனக்கு என்ன நடந்தாலும் நான் அதை எதிர்கொள்வேன்’ என்ற துணிச்சலான செயல்தான் அந்தத் துணையாளர்.

 

இன்னொரு பக்கம், அவர் நமக்கு அருகில் இருக்கிறார், நம் உள்ளத்தில் இருக்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: