• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

என்னோடு மகிழுங்கள்! இன்றைய இறைமொழி. வெள்ளி, 27 ஜூன் ’25.

Friday, June 27, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Reconciliation Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Mercy of God Most Sacred Heart of Jesus இயேசுவின் திருஇருதயம்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 27 ஜூன் ’25
இயேசுவின் திருஇருதயம் – பெருவிழா
எசேக்கியேல் 34:11-16. உரோமையர் 5:5-11. லூக்கா 15:3-7

 

என்னோடு மகிழுங்கள்!

 

‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்!’

 

24 அக்டோபர் 2024 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் ‘திலெக்ஸித் நோஸ்’ (‘அவர் நம்மை அன்பு செய்தார்’) என்னும் தன் நான்காவது சுற்றுமடலை வெளியிட்டார். இச்சுற்றுமடலின் நோக்கம் என்ன? (அ) இயேசு கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்தல். (ஆ) மேலோட்டமான இந்த உலகத்தை விடுத்து நம் வாழ்வின் மையத்துக்குக் கடந்துசெல்தல். (இ) இயேசுவின் தூய்மைமிகு இதய பக்திமுயற்சி நமக்கு விடுக்கும் சமூக மற்றும் மறைத்தூதுக் கடமைகளைப் புரிந்துகொள்தல்.

 

அ. விழா வரலாற்றுப் பின்புலம்

 

1. தொடக்கத் திருஅவை இயேசுவின் அன்பு மற்றும் இரக்கம் குறித்து தியானித்தது. தொடக்கத் திருஅவைத் தந்தையர்களில் புனித அகுஸ்தீன் மற்றும் புனித கிறிஸோஸ்தம் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் எழுதியுள்ளார்கள்.

 

2. மத்தியக் கால மறைஞானியர் (‘மிஸ்டிக்’) புனித ஜெர்ட்ருட் மற்றும் புனித மெக்டில்ட் போன்றோர் இரக்கம்நிறை இயேசு பற்றிய அனுபவங்களையும் காட்சிகளையும் பெற்றனர்.

 

3. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇருதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.

 

4. திருத்தந்தை 9-ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13-ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11-ஆம் பயஸ் ‘இரக்கம்நிறை மீட்பர்’ என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.

 

ஆ. திருஇதய பக்தி முயற்சிகள்

 

1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல்.

 

2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.

 

3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.

 

4. நற்கருணை ஆராதனை: முதல் வெள்ளிக் கிழமைகளில் தனிப்பட்ட அல்லது குழும நற்கருணை ஆராதனை செய்தல். திருப்பலி கண்டு நற்கருணை உட்கொள்தல்.

 

5. இல்லம் மற்றும் பணியிடங்களில் படம் அல்லது திருவுருவம் நிறுவுதல்: அவருடைய கண்கள் நம்மை நோக்கியிருக்குமாறு, அவருடைய கண்பார்வையில் நம் வாழ்க்கையை வாழ்தல்.

6. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.

 

இ. திருஇதயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள்

 

1. அன்பு என்னும் செயல்

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் ஆண்டவராகிய கடவுளின் இரக்கச் செயல்களை எடுத்துரைக்கிறார். பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை நோக்கி அறிவிக்கிற இறைவாக்கினர், ஆண்டவராகிய கடவுள் ‘தேடுபவராகவும், பேணிக்காப்பவராகவும், இளைப்பாறுதல் தருபவராகவும்’ முன்வைக்கிறார். ஆண்டவர் காட்டுகிற அன்பு வெறும் உணர்வு அல்ல, மாறாக, அது ஒரு செயல்பாடு. ஆக, இத்திருநாள் நமக்கு நினைவூட்டுவது அன்பு. அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு செயல்பாடு. அன்பினால் இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டார் எனில், அதே அன்பை நாம் ஒருவர் மற்றவருக்குப் பகிர்தல் நலம். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது’ என எழுதுகிறார் பவுல். ஆண்டவராகிய கடவுளின் அன்பை நாம் தனிப்பட்ட வாழ்வில் அனுபவிக்கும்போது அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் ஆற்றல் பெறுகிறோம்.

 

2. காணாமற்போனதைத் தேடிச் செல்தல்

 

கூட்டமாக நின்றிருந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போகிறது. அதைத் தேடிச் செல்கிறார் அதன் ஆயர். ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை அவருடைய தேடல் தொடர்கிறது. தூரமாகப் போன ஆட்டைத் தோளில் போட்டுத் தூக்கி வருகிறார். அவருடைய தேடலின் வலி மறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது. அவர் ஆட்டைக் கடிந்துகொள்வதில்லை, தீர்ப்பிடுவதில்லை, மாறாக, மகிழ்ச்சியோடு சுமந்து வருகிறார். ஏறக்குறைய இதே சொல்லோவியத்தை அகுஸ்தினார் ‘ஒப்புகைகள்’ நூலில் பயன்படுத்துகிறார். தான் காணாமற்போவதை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த கடவுள் தூரம் போகும் வரை காத்திருந்து தன்னைப் பற்றிக் கொண்டதாக எழுதுகிறார். நம் வாழ்வின் நிகழ்வுகளில் சிக்கி நாம் காணாமற்போகும்போது கடவுள் நம்மைத் தேடி வருகிறார்.

 

3. மனவருத்தமும் மனமாற்றமும்

 

இயேசுவின் திருஇருதய பக்தி நம்மில் மனவருத்தத்தைத் தூண்ட வேண்டும். மனவருத்தம் என்பது குற்றவுணர்வு அல்ல. மாறாக, ஆன்மா தன்னையே குணமாக்கிக்கொள்ளும் தளம். மனமாற்றம் என்பது நம் இதயத்தை தூய்மையாக்கி நாம் ஒருவர் மற்றவரோடு நம்மையே ஒப்புரவாக்கிக்கொள்வதாகும்.

 

4. பணி

 

இயேசுவின் இதயத்தை நோக்கிய நம் பயணம், சமூகத்தை நோக்கிய பயணத்தில்தான் நிறைவுபெறுகிறது. இயேசுவின் அன்பை அனுபவித்த நாம் அதை மற்றவர்களுக்கு வழங்க முன் வர வேண்டும். இயேசுவின் இதயம் கடவுளுக்கும் நமக்கும் பாலமாக இருப்பதுபோல நாமும் ஒருவர் மற்றவரைக் கடவுளோடு இணைக்க வேண்டும்.

 

இறுதியாக,

 

இயேசுவின் திருஇருதயம் நமக்கு மூன்று செய்திகளைத் தருகின்றது:

 

(அ) அவர் நம்மைக் காண்கின்ற கடவுள். அவரின் கருணைக்கண்கள் நம்மேல் பட, நாம் வாழ்கிறோம். ஆக, ஒரு சிறிய படத்தையாவது நம் முன் வைத்துக்கொள்வோம்.

 

(ஆ) அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார்.

 

(இ) அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், ‘கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால், அவர் நம்மை அன்பு செய்ய அனுமதிப்பதுதான் கடினம்’ என்கிறார். அவரை அனுமதித்தல் நலம்.

 

இத்திருநாள் அன்று இயேசுவின் திருஇதயத்தை நம் இல்லங்களின் தலைவராக அணி செய்வோம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: