• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

மாற்றுச் சமூகம். இன்றைய இறைமொழி. செவ்வாய், 29 ஏப்ரல் ’25.

Tuesday, April 29, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio

இன்றைய இறைமொழி
செவ்வாய், 29 ஏப்ரல் ’25
பாஸ்கா இரண்டாம் வாரம் – செவ்வாய்
திருத்தூதர் பணிகள் 4:32-37. யோவான் 3:7-15

 

மாற்றுச் சமூகம்

 

தொடக்கத் திருஅவை வரலாற்றை வாசிக்கும்போது கிறிஸ்தவ சமூகம் அல்லது புதிய வழி என்னும் குழுமம் இரண்டு வழிகளில் உருவானது: (அ) இயேசுவின் உயிர்ப்பின்மேல் திருத்தூதர்களும் மக்களும் கொண்ட நம்பிக்கை. (ஆ) அனைத்தையும் பொதுவுடைமையாகக் கொண்ட மாற்றுச் சமூகம்.

 

இயேசுவின் உயிர்ப்பு பற்றிய போதனை தொடக்கத்தில் பெரிய அளவில் மக்கள் நடுவில் எடுபடவில்லை. ஏனெனில், அது காணக்கூடிய அடிப்படையில் இல்லை. அறிவுக்கு எட்டாத எதையும் ஏற்றுக்கொள்ள அன்றைய குழுமம் தயாராக இல்லை. காணக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் உருவானதுதான் புதிய குழுமம்.

 

இந்தக் குழுமத்தின் பண்புகள் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகின்றன:

 

(அ) அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள் – ஏறக்குறைய திருமண உறவில் கணவன் மனைவி இணைந்திருப்பது போல ஒரே எண்ணம், ஒரே புரிதல் கொண்டவர்களாக இருந்தார்கள்.

 

(ஆ) தன்னலம் எதுவும் பாராட்டாமல் அனைத்தையும் பொதுவில் வைத்திருக்கிறார்கள் – ஒவ்வொருவரும் தன்னால் இயன்றது, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையைப் பொருத்து!

 

(இ) உயிர்ப்புக்குச் சான்று பகர்ந்தார்கள் – மக்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே சென்றார்கள்.

 

மேற்காணும் மூன்று பண்புகளும் இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கையாளர் குழுமங்களில் இருக்கிறதா என்று கேட்டால், பதில் ‘இல்லை’ என்றே வரும்.

 

கிறிஸ்தவத்திற்குள் நிறைய பிரிவுகள் – கொள்கை, தலைமை, இறையியல், வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை, அழைத்தல் என்று பல நிலைகளில் பிரிந்து நிற்கிறோம். துறவற இல்லங்களில் பொதுவுடைமை வாழ்க்கை முறை இருந்தாலும் ஒவ்வொரு துறவற இல்லமும் தன் தனிவுடைமையை பெருக்கிக்கொள்வதில்தான் அக்கறை காட்டுகிறது. நம் போதனை வெறும் சடங்குச் சொற்களாக, வார்த்தைப் பந்தல்களாக மாறிவிட்டன.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் நிக்கதேமுக்குமான உரையாடலில், நம்பிக்கையை நோக்கி அழைக்கிறார் இயேசு. நிக்கதேம் தயங்குகிறார்.

 

அறிவுக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளி இன்றும் தொடர்ந்து இருக்கிறது.

 

நம்பிக்கையை வாழ்வியல் மாற்றமாகக் கொண்டுவந்தால் மற்றவர்களை அது ஈர்க்கும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: