• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

எதிர்வினை தவிர்த்தல். இன்றைய இறைமொழி. செவ்வாய், 30 செப்டம்பர் ’25.

Tuesday, September 30, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

சமாரியர்கள் மறைப்பணியாளர் புனித எரோணிமுஸ் எதிர்வினை லூக்கா-பயணத்தின் நற்செய்தி இயேசுவின் பயணம் இயேசுவின் ஆற்றல் தூய்மை-தீட்டு நிலைகள் மேட்டிமை-தாழ்மை நிலைகள் வாழ்க்கை பயணம்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 30 செப்டம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் வாரம்
புனித எரோணிமுஸ், மறைப்பணியாளர் – நினைவு

செக்கரியா 8:20-23. லூக்கா 9:51-56

 

எதிர்வினை தவிர்த்தல்

 

இயேசுவுடைய சீடர்கள் ரொம்ப கோபக்காரங்களா இருக்காங்க! அவர்களைச் சமாளிப்பதே இயேசுவுக்கு மிகப் பெரிய வேலையாக இருந்திருக்கும்!

 

தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகர்மேல் தீ விழுமாறு செய்யவா? எனக் கேட்கின்றனர். இருமுறையும் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

 

‘விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே இயேசு எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்தார்’ எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. லூக்காவின் நற்செய்தி பயணத்தின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இந்த வாக்கியமே. ஏனெனில், லூக்காவின் இயேசு பயணம் செய்துகொண்டே இருக்கின்றார். அவருடைய போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் அனைத்தும் அவருடைய பயணத்தின் நிகழ்வுகளாக அமைகின்றன.

 

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஏனெனில், இயேசு தங்களைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒருவேளை, அவர் தங்களுடன் தங்கவில்லை என்று அவர்மேல் கோபித்திருக்கலாம். வழக்கமாக, கலிலேயாவிலிருந்து (வடக்கிலிருந்து) யூதேயாவுக்கு (தெற்கு நோக்கி) பயணம் செய்யும் யூதர்கள், சமாரியா நிலப்பகுதியைத் தவிர்த்து, யோர்தானை ஒட்டிய பகுதியில் நடந்துசெல்வார்கள். ஏனெனில், சமாரிய நிலப்பகுதி தீட்டானது என்பது அவர்களுடைய நம்பிக்கை. இயேசு அந்த நம்பிக்கையை உடைக்கின்றார். சமாரியப் பகுதி வழியாகப் பயணம் செய்ய விரும்புகின்றார்.

 

சமாரியர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைக் கண்டு, தங்கள் போதகரிடம் ‘வெரி குட்’ வாங்குவதற்காக, ‘சமாரியக் கிராமத்தின்மேல் வானத்திலிருந்து தீ விழுமாறு செய்யவா?’ எனக் கேட்கின்றனர்.

 

இயேசு தன் ஆற்றலை ஒருபோதும் தனக்காகவோ, அல்லது யாரையும் பழிதீர்க்கவோ பயன்படுத்தவில்லை. சாத்தான் அவரைப் பாலைவனத்தில் சோதித்தபோது, முதல் சோதனை அதுதான். கற்களை அப்பமாக மாற்றி பசியாற்றிக்கொள்ளுமாறு சாத்தான் தூண்டியபோது இயேசு மறுக்கின்றார்.

 

இங்கே, சீடர்கள் மற்றவர்கள்மேல் பழிதீர்த்துக்கொள்ள தங்கள் ஆற்றலைப் பயன்படுத்த நினைப்பதை இயேசு விரும்பவில்லை.

 

அதற்கும் முன்னதாக, தீமைக்குப் பதில் தீமை செய்வதோ, அல்லது உணர்வுப் பெருக்கில் ஒருவர் வினையாற்றும்போது அதே உணர்வுப் பெருக்கில் எதிர்வினை ஆற்றுவதோ தவறு என்பது இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.

 

இயேசு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, அடுத்த முயற்சி என்ன என்பதைப் பார்க்கின்றார். வேறு ஊர் வழியாகப் பயணம் செய்கின்றார். எதிர்வினை ஆற்றி தன் ஆற்றலை விரயம் செய்ய அவர் விரும்பவில்லை.

 

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) தூய்மை-தீட்டு என்ற நிலையிலோ, அல்லது அடிமைப்படுத்தும் நிலையிலோ சமூகம் அல்லது நாம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறுவது. ஏனெனில், தூய்மை-தீட்டு, மேட்டிமை-தாழ்மை என்பது நம் உள்ளத்து உணர்வுகளே தவிர வெளியில் அப்படி எதுவும் இல்லை.

 

(ஆ) நம் வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை உணர்வது. இந்தப் பயணத்தில் தடைகள் வரலாம். நம்முடன் பயணம் செய்பவர்கள் நமக்கு இடர்கள் தரலாம். ஆனால், பயணம் தடைபடக் கூடாது. ஒரு பாதை அடைக்கப்பட்டால் மறு பாதையைக் கண்டுபிடித்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். விண்ணேற்றம் ஒன்றே – அதாவது, மேன்மை அல்லது வெற்றி ஒன்றே – நம் இலக்காக இருக்க வேண்டும்.

 

(இ) எதிர்வினை ஆற்றுதல் பெரிய ஆற்றல் விரயம் என்பதை உணர்வது. சமாரியர்கள் இயேசுவின்மேல் எதிர்வினை ஆற்ற, சீடர்கள் சமாரியர்கள்மேல் எதிர்வினை ஆற்றுகின்றனர். ஆனால், இயேசு இரு நிலைகளிலும் தன் ஆற்றலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். நாம் பல நேரங்களில் நம்மை அறியாமல் எதிர்வினை ஆற்றிக்கொண்டே, அல்லது தேவைற்றவற்றுக்குப் பதிலிறுப்பு செய்துகொண்டே நம் ஆற்றலை வீணாக்குகின்றோம். ஆற்றலைத் தற்காத்தல் மிகப் பெரிய அவசியம். ஏனெனில், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஓர் ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.

 

இன்று மறைப்பணியாளர் புனித எரோணிமுவை நாம் நினைவுகூர்கிறோம். விவிலியத்தை இலத்தீன் மொழிக்குக் கொண்டு வந்தவர் இவர். தன் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை பெத்லகேமில் செலவிட்டவர். இவரைப் பற்றிக் குறிப்பிடுகிற திருத்தந்தை பிரான்சிஸ், ‘விவிலியத்தின்மேல் இவர் கொண்டிருந்த ஆர்வமும், விவிலிய மொழிகளில் இவர் கொண்டிருந்த ஆற்றலும் வியப்புக்குரியவை’ என்கிறார். ‘மறைநூலை அறியாதவர் கிறிஸ்துவை அறியாதவர்’ என்று மொழிந்தார் இப்புனிதர். மறைநூல் மேல் நமக்கு ஆர்வத்தையும் அதைப் புரிந்துகொள்வதற்கான ஆற்றலையும் நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: