• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

செயல்களின் மேன்மை. இன்றைய இறைமொழி. வியாழன், 26 ஜூன் ’25.

Thursday, June 26, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 26 ஜூன் ’25
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – வியாழன்
தொடக்கநூல் 16:1-12, 15-16. மத்தேயு 7:21-29

 

செயல்களின் மேன்மை

 

‘அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.’

 

ரபிக்களின் போதனை இறுதியில் தன்னாய்வுக் கேள்வியுடன் நிறைவுபெறும். மாணவர்கள் தாங்கள் கேட்டதன் அடிப்படையில் தங்களுடைய போதகருக்கு விடை தர வேண்டும். நாம் கடந்த இரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கும் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மலைப்பொழிவின் இறுதியில் ரபி போல இயேசு ஒரு கேள்வியை சீடர்கள்முன் வைக்கிறார்: ‘நீங்க எந்த வகை அடித்தளத்தில் வீடு கட்டப் போகிறீர்கள்? பாறை மீதா? அல்லது மணல் மேலா?’ இந்தக் கேள்விக்கு விடையளிப்பதன் வழியாக சீடர் தன் தெரிவை வெளிப்படுத்துகிறார். இந்தத் தெரிவு அவர் தன் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள உதவுகிறது.

 

சொற்கள் அல்ல, மாறாக, செயல்களே வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை வெறும் சொற்களாக இல்லாமல், செயல்களாக மாற வேண்டும். சொற்கள் அடித்தளமற்றவை, எளிதாகப் பேசப்படுபவை, காற்றில் கரைந்துவிடுபவை. ஆனால், செயல்கள் ஆழமான அடித்தளம் கொண்டிருக்கின்றன. செயல்களைச் செய்துமுடிக்க நம் தொடர்முயற்சி தேவைப்படுகிறது. செயல்கள் நம் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

இன்றைய வாசகங்களை ‘பொறுமை’ என்னும் கோணத்திலும் நாம் பார்க்க முடியும். பாறை மீது கட்டுவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 16:6-12, 15-16) ஆபிரகாமின் பொறுமையின்மையைப் பார்க்கிறோம். ஆண்டவர் அவருக்குக் குழந்தை பிறக்கும் என வாக்களித்திருக்கிறார். ஆனால், நேற்றைய நற்செய்தியில் தானாகவே முன்வந்து எலியேசரை – தன் அடிமையின் மகனை – தத்து எடுத்துக்கொள்ள விழைகின்றார். அதுவும் பொறுமையின்மை. இன்று, சாராவின் வற்புறுத்துதலின் பேரில் பணிப்பெண் ஆகாரை ஏற்று அவர் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்.

 

ஆபிரகாம் ஒரு பக்கம் நம்பிக்கையின் தந்தையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பொறுமை இழந்தவராக இருக்கிறார்.

 

அன்பு பொறுமை உள்ளது (1 கொரி 13:4). இன்றைய நம் ஓட்டங்கள் மேலோட்டமான வாழ்வையே தருகின்றன. நாம் கடவுளின் செயல்கள்மேல் பற்றுறுதி கொண்டுள்ளோம், அருளின் மறைபொருள் பெரிது என நாம் அறிந்ததன் அடையாளமே பொறுமை (‘எவான்ஜெலி கௌதியம்,’ 24).

 

பொறுமை மிகவும் அவசியம். இன்று இரண்டு நிமிட வீடியோவைக் கூட ஃபார்வர்ட் செய்து பார்க்கும் அளவிற்குப் பொறுமை இழந்து நிற்கிறோம். வைஃபை ஸ்லோ என்றால், சார்ஜிங் ஸ்லோ என்றால், லோடிங் ஸ்லோ என்றால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேகமான நெட்வொர்க்கை நோக்கி ஓடுகிறோம். இறுதியில், பேட்டரியும் குறைந்து, நாமும் மெலிந்து நிற்கிறோம். இறைவன் நம்மில் நடத்தும், நம்மைச் சுற்றி நடத்தும் அனைத்தும் அற்புதங்களே. அவற்றைக் கண்டுகொள்ள பொறுமை அவசியம்.

 

ஆபிரகாம் ஆகார் என்ற மணல்மேல் வீடு கட்ட விரும்பினார். ஆனால், கடவுள்தாமே அவருக்குப் பாறையின் மேல் வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார். மணலில் வீடு கட்டுவது எளிது. அதற்குத் தேவையான உழைப்பு மிகக் குறைவு. ஆனால், ஆபத்து மிக அதிகம். பொறுமையின்மையால் – நம் உள்ளத்தில், நம் இல்லத்தில், நம் வாகன ஓட்டுதலில், நம் பணியிடத்தில் – நாம் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்திருப்போம்.

 

ஆக, இன்று கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எத்துணை நலம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: